இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவா?: மனித நேய மக்கள் கட்சி மறுப்பு
சென்னை: திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் திமுகவுக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என்று வெளியான செய்தியை அக் கட்சியின் தலைவரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் (தமுமுக) மூத்த தலைவருமான பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் மறுத்துள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது மனித நேய மக்கள் கட்சி. இந் நிலிய்ல் அந்தக் கட்சியின் திருச்சி மாவட்டத் தலைவர் அப்துல் ஹக்கீம், நேற்று திருச்சியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தகவல் வெளியாயின.
ஆனால், இதை ஜவாஹிருல்லாஹ் மறுத்துள்ளார். இது தொடர்பாக தமுமுக இணையத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள விளக்கம்:
திருச்சி மேற்கு சட்டப்பேரவை தொகுதிக்கு நடைபெறும் இடைத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி, அங்கு போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் ஆதரவு அளிக்கவில்லை. சில ஊடகங்களில், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி வேட்பாளருக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்ததாக வெளியாகியுள்ள செய்தி தவறானதாகும்.
திருச்சி மேற்கு சட்டப்பேரவை தொகுதி வாக்காளர்கள், மனசாட்சியின் படி வாக்களிக்குமாறு மனிதநேய மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
கீழக்கரை- சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு:
அவர் வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில், கீழக்கரை நகர்மன்றத் தலைவர் பதவிக்கு கீழக்கரையில் உள்ள பெரும்பாலான ஜமாஆத்களின் ஆதரவுடன் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் நிலவு (என்ற) எஸ். மெஹர்பானுவிற்கு மனிதநேய மக்கள் கட்சி தனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. அவருக்கு கை கடிகாரச் சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றிப் பெற வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், மெஹர் பானுவை பொது வேட்பாளராக ஏற்க மறுத்த கட்சி நிர்வாகிகள் சிலரை கட்சியிலிருந்து நீக்கியும் ஜவாஹிருல்லாஹ் உத்தரவிட்டுள்ளார்.