துருக்கியில் சிகரெட் கடத்தல் கும்பலை பிடிக்க சென்ற போலீசார் மீது தேனீக்களை விட்டு தாக்குதல்
இஸ்தான்புல்: துருக்கியில் சிகரெட் கடத்தியவர்களை பிடிக்க சென்ற போலீசார் மீது தேனீக்களை ஏவிவிட்டு தப்ப முயன்ற கடத்தல் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
துருக்கியில் சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவ்வப்போது சிகரெட்கள் திருட்டுத் தனமாக கடத்தப்பட்டு, கடத்தல் சந்தையில் விற்கப்படுகிறது. சிகரெட் கடத்தலில் ஈடுபடுபவர்கள் போலீசாரிடம் சிக்குவதும் உண்டு.
இந்நிலையில் துருக்கியில் உள்ள அடானா பகுதி வழியாக திருட்டுத்தனமாக சிகரெட் மூட்டைகள் கடத்தப்படுவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்குள்ள சோதனை சாவடியில் 15 பேர் கொண்ட போலீ்ஸ் படை, வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குறிப்பிட்ட லாரி ஒன்றின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அந்த லாரியில் சோதனையிட, லாரியின் பின்பக்க கதவை திறந்தனர். அப்போது தாங்கள் போலீசாரிடம் சிக்கி கொள்வது உறுதி என அறிந்து கொண்ட கடத்தல்காரர்கள், முன்பகுதியில் இருந்த வண்ணம் சிகரெட் பெட்டிகளுக்கு இடையே வைத்திருந்த தேன் தேனீககள் அடங்கிய கூண்டை திறந்து அதைக் கலைத்து விட்டனர்.
வழக்கமான சோதனை தானே என, எந்த ஆயுதமும் இல்லாமல் சென்ற போலீசாரை, தேனீக்கள் துரத்தி துரத்தி கொட்டித் தீர்த்தன. இதில் சோதனைக்கு சென்ற போலீசாருக்கு உடல் முழுவதும் வீக்கமும், சிலர் மயக்கமும் அடைந்தனர்.
இந்த இடைப்பட்ட நேரத்தை பயன்படுத்தி கடத்தல் கும்பல் தப்ப செல்ல முயன்றது. கொட்டு வாங்கினாலும், கடமை தவறாத போலீசார் சிலர், உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மற்றொரு போலீஸ் படை, தப்பி செல்ல முயன்ற 3 பேர் கொண்ட கடத்தல் கும்பலை கைது செய்தனர்.
மேலும், தேனீக்களை தீப்பந்தங்களை பயன்படுத்தி விரட்டி அடித்தனர். தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்த போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். லாரியில் கடத்த முயன்ற 32,500 சிகரெட் பெட்டிகளை பறிமுதல் செய்தனர். லாரி ஒட்டுநர் மற்றும் 2 தேனீ வளர்ப்பவர்கள் லாரியில் இருந்து கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.