21 வயது பெண்ணை மணந்த 31 வயது பூட்டான் மன்னர்-மக்கள் கோலாகல கொண்டாட்டம்
திம்பு: பூடான் நாட்டு மன்னரான ஜிங்மி கிசார் நாம்கியால் வாங்க்சுக் தன்னை விட 10 வயது இளையவரான ஜெட்சன் பிமா என்ற கல்லூரி மாணவியை திருமணம் செய்து கொண்டார்.
பூடான் நாட்டு மன்னர் ஜிங்மி கிசார் நாம்கியால் வாங்க்சுக் (31). இவர் ஆக்ஸ்போர்டு பல்கலை கழகத்தில் படித்து பட்டம் பெற்றவர். இவர் எளிய குடும்பத்தை சேர்ந்த ஜெட்சன் பிமா (21) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்தியாவின் இமாச்சல பிரதேச மாநிலத்தின் சன்வார் நகரில் உள்ள பள்ளியில் படித்த ஜெட்சன் பிமா, இந்தியாவில் கம்ப்யூட்டர் பயிற்சி கற்றவர். தற்போது லண்டனில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் ராஜ குடும்பப் பின்னணியைக் கொண்டவர் அல்ல, சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்.
இவர்களின் திருமணம் பூடான் நாட்டின் பண்டைய தலைநகரமான புனாகா நகரில் உள்ள 17ம் நூற்றாண்டை சேர்ந்த பழம்பெரும் கோட்டையில் நடந்தது. இதற்காக கோட்டை புதுப்பி்த்து, புது பொழிவுடன் காட்சியளித்தது. பல நாடுகளை சேர்ந்த விருந்தினர் உட்பட 1500 பேர் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
ஜோதிடர்கள் குறித்து கொடுத்த நல்லநேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த திருமணத்தை பூடான் நாட்டின் தலைமை புத்த மதக் குரு நடத்தி வைத்தார். திருமணத்தில் பூடான் பாரம்பாரிய ராஜ உடை உடுத்தி வந்த மணமகனான மன்னர் ஜிங்மி மற்றும் மணமகள் ஜெட்சன் ஆகியோர் நித்திய வாழ்க்கையின் பானத்தை அருத்தினர். அதன்பின் தனது மனைவியான ஜெட்சனின் தலையில் ராணியின் கிரீடத்தை, மன்னர் ஜிங்மி அணிவித்தார்.
இந்த திருமணத்தை அந்த நாட்டு டிவி சேனல் நேரடி ஓளிபரப்பியது. இதன்மூலம் நாட்டிலுள்ள 7 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள், இந்த திருமணத்தை கண்டு களித்தனர். இது ஒரு மறக்க முடியாத உணர்வு பூர்வமான மற்றும் ஆன்மீக அனுபவம் என அந்நாட்டு பிரதமர் தெரிவித்தார். இந்திய நாட்டின் சார்பாக மேற்குவங்க கவர்னர் எம்.கே.நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இமயமலையின் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள பூட்டான் முழுவதும் திருமண வைபவம் உற்சாக அலையைப் பரப்பி விட்டிருந்தது. திருமண தம்பதியரை காண ஆயிரக்கணக்கான கிராம மக்கள் மற்றும் விருந்தினர் வழிநெடுக்கிலும் காத்திருந்தனர். இந்த திருமணத்திற்காக பூடானில் 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மன்னராக பதவியேற்ற ஜிங்மியின் திருமணத்தை காண பூடான் மக்கள் காத்திருந்தனர். திருமணம் குறித்து அந்நாட்டு மக்கள் கூறியதாவது, மன்னர் தனது நாட்டையும், நாட்டு மக்கள் மீது அதிக அன்பு கொண்டவர். எங்களோடு எப்போதும் அன்பாக பேசும் பண்பு கொண்டவர். மன்னரின் திருமணம், எங்கள் வீட்டு திருமணம் போன்ற எண்ணத்தை அளிக்கிறது, என்றனர்.