கூடங்குளம்- வெளி மாநில கூலித் தொழிலாளர்கள் குடியிருப்புகளை காலி செய்ய நடவடிக்கை
கூடன்குளம்: அணுமின் நிலையத்திற்கு வேலைக்கு செல்லும் வெளி மாநில தினக்கூலி ஊழியர்கள் குடியிருப்புகளை காலி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கூடங்குளம் அணுமின்நிலையத்தை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 5 நாட்களாக இடிந்தகரையில் இரண்டாவது கட்டமாக தொடர் உண்ணாவிரதம் நடந்து வருகிறது
உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இடிந்தகரை மற்றும் கூடன்குளம் பகுதிகளில் வியபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். மேலும் கடற்கரை கிராம மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் தங்கள் குடும்பத்தினருடன் உண்ணாவிரத போரட்டத்தில் கலந்து கொண்டனர். காலையில் கூடன்குளம் மற்றும் சுற்று கிராம பகுதிகளை சேர்ந்த தினக்கூலி ஊழியர்கள் அணுமின் நிலையத்திற்கு வேலைக்கு சென்றனர்.
அப்போது போராட்டக் குழுவின் ஒரு பகுதியினர் அணுமின் நிலையத்திற்கு வேலைக்கு செல்லும் தினக்கூலி ஊழியர்களை கூடன்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் வழிமறித்து வேலைக்கு செல்லவிடாமல் தடுத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது.
தகவல் அறிந்த போராட்டக் குழுவினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு வேலைக்கு செல்லும் சுற்று கிராம பகுதிகளை சேர்ந்த தினக்கூலி ஊழியர்களை அணுமின் நிலையத்திற்கு வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கிராமம் கிராமமாக சென்று போராட்டக் குழுவினர் ஆதரவு கேட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அணுமின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு செல்லும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களை கூடன்குளம் பகுதிகளில் வாடகைக்கு குடியிருப்பவர்களை காலி செய்ய நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.
பொதுமக்களின் இந்த வேகமான போராட்டத்தினால் அணுமின் நிலையத்திற்கு செல்லும் தினக்கூலி ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் சுமார் 6 ஆயிரம் பேர் பணிபுரிந்து வந்ததில் தற்போது ஆயிரத்திற்கும் குறைவானவர்களே வேலைக்கு செல்வதால் அணுமின்நிலைய கட்டுமானப் பணிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
இதனால் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படவிருக்கும் மின் உற்பத்தி பல மாதங்கள் காலதாமதமாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.