பௌர்ணமி வெளிச்சத்தில் பளிச்சென மின்னிய தாஜ்மஹால்
ஆக்ரா: ஜில்லென்ற தென்றல் மென்மையாக வீச, முழு வட்ட பௌர்ணமி நிலவின் பால் ஒளியில் நனைந்த தாஜ்மஹாலைப் பார்த்து மனதைப் பறி கொடுக்காதவர்களே இருக்க முடியாது.
உத்தர பிரதேச மாநிலத்தில் யமுனா நதிக்கரையில் இருக்கிறது தாஜ்மஹால். சாதாரணமாக அதைப் பார்த்தாலே அடடா என்ன அற்புதம் என்று புகழ்வார்கள். பௌர்ணமி நிலவொளியில் அந்த பளிங்கு மாளிகை மின்னும்போது பார்த்தால் சொல்லவா வேண்டும். அந்த அழகைப் பார்க்க கோடி கண் வேண்டும்.
நேற்று முன்தினம் பௌர்ணமி நாள் என்பதால் தாஜ் மஹால் நள்ளிரவு வரை திறந்திருந்தது. தாஜ் மஹாலின் அழகை இரவு நேரத்தில் அதுவும் பௌர்ணமி வெளிச்சத்தில் கண்டு ரசித்து மயங்க சுமார் 350 பேர் வந்திருந்தனர். அதில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும் அடக்கம். பௌர்ணமி வந்தால் தாஜ் மஹாலிடம் மனதைப் பறிகொடுக்க தீபிகா அங்கு சென்றுவிடுவார்.
நேற்று முன்தினம் இரவு தந்தை பிரகாஷ் படுகோனே உள்ளிட்ட 4 பேருடன் வந்திருந்தார். சில்லென்ற தென்றல் இதமாக வீச அனைவரும் தாஜ் மஹாலின் அழகில் லயித்திருந்தனர். அதைப் பார்க்கையில் கவிதை எழுதத் தெரியாதவர்களுக்கும் கூட கவிதை சொல்லத் தோன்றும்.
இது குறித்து அந்த காட்சியை நேரில் கண்டவர்கள் கூறியதாவது,
நிலா மிகவும் பிரகாசமாக இருந்தது. நல்ல வேளை மேக மூட்டம் வந்து நிலவை மறைக்கவில்லை. கடந்த 2 நாட்களாக படு சூடாக இருந்தது. ஆனால் இன்று குளிர்ச்சியாக உள்ளது. கொஞ்சம் மழை பெய்தால் தாஜ் மஹால் தூசியின்றி இன்னும் அழகாக இருக்கும். மழை பெய்தால் தாஜ் மஹால் பளிச்சென்று இருக்கும். அப்போது நிலா வெளிச்சம் அதில் படும்போது பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
நிலா வெளிச்சம் பட்டவுடன் ஒவ்வொரு பளிங்கும் மிண்ணியது. அதைப் பார்த்த மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர் என்றனர்.