போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ்
இதற்கான உத்தரவை அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாக இயக்குநர்களுக்கும் போக்குவரத்துத் துறையின் செயலாளர் வெள்ளிக்கிழமை அனுப்பினார்.
இதனால் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 1.25 லட்சம் பேர் பயனடைவார்கள். போனஸ் கணக்கிடுவதற்கான அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி தொகை ரூ.3500க்கும் அதிகமாக இருந்தாலும், ரூ.3500 என்ற தொகையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு போனஸ் கணக்கிடப்படும்.
இதன்படி அதிகபட்சம் ரூ.8400 வரை மட்டுமே ஊழியர்களுக்கு போனஸ் கிடைக்கும்.
போக்குவரத்துக் கழக நிரந்தர ஊழியர்கள் மற்றும் நிரந்தரப் பணிக்காகத் தேர்வு செய்யப்பட்ட தாற்காலிக பணியாளர்களுக்கும் 20 சதவீத போனஸ் கிடைக்கும். இதில் 8.33 சதவீதம் போனஸ், 11.67 சதவீதம் கருணைத் தொகை ஆகும்.
சேமநலப் பணியாளர்களாக (ரிசர்வ்) உள்ள தினக்கூலி அடிப்படையிலான ஊழியர்களுக்கு 8.33 சதவீத போனஸ் மட்டுமே கிடைக்கும்.
கண்காணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு போனஸ் கிடைக்காது.
மாநில அரசின் பொதுத் துறை நிறுவனங்களுக்கு 20 சதவீதம் வரை போனஸ் வழங்கலாம் என நிதித் துறை சார்பில் கடந்த மாதம் 29-ம் தேதி உத்தரவு வெளியிடப்பட்டது. நஷ்டத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனமாக இருந்தால் 10 சதவீதம் வழங்கலாம் எனவும் அதில் யோசனை தெரிவிக்கப்பட்டிருந்தது.
முந்தைய ஆண்டுகளில் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் தொகை வழங்கப்பட்டது. எனவே இந்த ஆண்டு தங்களின் போனஸ் 10 சதவீதமாகக் குறையக்கூடும் என்ற அச்சம் தொழிலாளர்களிடம் இருந்தது.
ஆனால், அவர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் 20 சதவீத போனஸ் வழங்குவதற்கான உத்தரவை அரசுச் செயலாளர் அனுப்பி இருக்கிறார். மாநில தேர்தல் ஆணைய அனுமதியோடு இந்த போனஸ் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன் மூலம் அரசுக்கு ரூ 63.14 சதவீதம் கூடுதல் செலவாகும்.