ஆதிதிராவிட எழுத்தாளர்களுக்கு தமிழக அரசு உதவித் தொகை
மதுரை: அரசு உதவித் தொகை விரும்பும் சிறந்த ஆதிதிராவிடர் எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தமிழக அரசின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுப் பணிக்கான நிதியிலிருந்து 2011-12ம் ஆண்டிற்கான சிறந்த ஆதிதிராவிடர்/ஆதிதிராவிடர் கிருத்துவர்/ பழங்குடியினர் பிரிவை சார்ந்த 10 எழுத்தாளர்களைத் தேர்வு செய்து நிதியுதவி வழங்கப்பட உள்ளது.
மேலும், ஆதிதிராவிடர் பற்றி எழுதும் ஆதிதிராவிடர் அல்லாத ஒருவருக்கும் பரிசு வழங்கப்படும். இதற்கான நூல் வெளியிட 20,000 ரூபாய் வரை நிதியுதவி அளிக்கப்படும். இதற்கு, பெயர், முகவரி, படைப்பின் பொருள் உள்ளிட்ட விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு, தமிழக அரசின் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும், அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்திலும் விவரங்களை பெற்றுக் கொள்ளலாம். முறையான விண்ணப்பத்துடன் படைப்புகள் எழுத்து வடிவில் விண்ணப்பதாரரின் கைபேசி எண்களை குறிப்பிட்டு 30.11.2011 தேதிக்குள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.