மக்களிடம் கேட்டுக் கேட்டு மனைவியை 3 முறை முத்தமிட்ட பூடான் மன்னர்
பூடான் மன்னர் நாம்கியாலின் திருமணம் வெகு கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்தையும், அதன் பின்னர் நடந்த நிகழ்ச்சிகளையும் பல ஆயிரம் மக்கள் திரண்டு வந்து பார்த்து மகிழ்ந்து புதுமணத் தம்பதிகளான தங்களது மன்னர் மற்றும் அவரது புது மனைவியை ஆசிர்வதித்தனர்.
திம்புவில் உள்ள ஸ்டேடியத்தில் புதுமணத் தம்பதிக்கு வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மன்னர் நாம்கியால் தனது மனைவி ஜெட்சன் பெமாவுடன் கலந்து கொண்டார். அப்போது பாரம்பரிய நடன நிகழ்ச்சி உள்ளிட்டவை மணமக்களுக்காக நடத்தப்பட்டது. குழந்தைகள் கலந்து கொண்ட டேக்வாண்டோ நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. பிரதமர், பூடான் எம்.பிக்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
நடன நிகழ்ச்சியின்போது மன்னரும், அவரது மனைவியும் மற்றவர்களுடன் கலந்து கொண்டு ஆடி மகிழ்ந்தனர். பின்னர் மைக்கை கையில் எடுத்த மன்னர் நாம்கியால் நான் உங்களது ராணியை முத்தமிடுவதைப் பார்க்கிறீர்களா என்று கேட்டார். அதைக் கேட்டு மக்கள் உற்சாக குரல் எழுப்பினர். இதையடுத்து கன்னத்தில் முத்தமிட்டார் மன்னர் நாம்கியால். இதேபோல மேலும் 2 முறை கேட்டு கேட்டு முத்தமிட்டார். கடைசியாக அவர் ராணியின் உதட்டில் முத்தமிட்டபோது கூட்டத்தினர் உற்சாகத்தில் குரல் எழுப்பினர்.