கைதான முன்னாள் முதல்வர் எதியூரப்பாவுக்கு திடீர் நெஞ்சு வலி- மருத்துவமனையில் அனுமதி!
நில ஒதுக்கீடு தொடர்பான ஊழல் விவகாரத்தில் சிக்கிய எதியூரப்பா மீது லோக் ஆஐயுக்தா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் முன் ஜாமீன் கோரியிருந்தார் எதியூரப்பா. ஆனால் அதை லோக் ஆயுக்தா கோர்ட் தள்ளுபடி செய்து அவரைக் கைது செய்ய உத்தரவிட்டது.
இதையடுத்து லோக் ஆயுக்தா கோர்ட்டில் நேற்று சரணடைந்தார் எதியூரப்பா. அவரை அக்டோபர் 22ம் தேதி வரை சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி அவர் பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு கைதி எண் 10462 கொடுக்கப்பட்து. 20க்கு 14 என்ற வசதியான அறையில் அவர் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை ஒன்றே கால் மணியளவில் எதியூரப்பா வாந்தி எடுத்தார், நெஞ்சும் வலிப்பதாக தெரிவித்தார். ஒரு மணி நேரத்தில் மூன்று முறை எதியூரப்பா வாந்தி எடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து அவரை உடனடியாக ஜெயதேவா இருதவியல் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.
இருப்பினும் தற்போது அவரது நிலை சாதாரணமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எதியூரப்பாவை கர்நாடக முதல்வர் சதானந்த கெளடா நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார்.
நாளை ஜாமீன் மனு
இதற்கிடையே, எதியூரப்பா சார்பில் நாளை ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.