வக்கீல்களின் தொடர் போராட்டம் எதிரொலி-இழுத்து மூடப்பட்ட கோவை எஸ்.பி. அலுவலகம்
கோவை: கோவையில் வழக்கறிஞர் ஆனந்தீஸ்வரனை தாக்கிய காவலரைக் கைது செய்யக் கோரி நடைபெறும் தொடர் போராட்டத்தின் காரணமாக கோவை எஸ்.பி. அலுவலகம் இழுத்து மூடப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
வழக்கு சம்பந்தமாக வழக்கறிஞர் ஆனந்தீஸ்வரன் என்பவர் கோவை அருகே உள்ள துடியலூர் காவல் நிலையத்திற்கு சென்று தகவல் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் வழக்கறிஞர் ஆனந்தீஸ்வரனை காவலர்கள் சிலர் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால், துடியலூர் பெண் எஸ்.ஐ ரேணுகாதேவி உள்பட 5 காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
ஆனால், வழக்கறிஞர் ஆனந்தீஸ்வரனை தாக்கிய காவலர்களை கைது செய்யக் கோரி நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். மேலும், கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் தொடர் முற்றுகை போராட்டத்தை வழக்கறிஞர்கள் நடத்தி வருகின்றனர்.
வழக்கறிஞர்கள் தொடர் போராட்டம் காரணமாக, கோவை மாவட்ட எஸ்.பி.அலுவலகம் பூட்டப்பட்டது. இதனால் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மனு கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். வழக்கறிஞர் ஆனந்தீஸ்வரனை தாக்கிய காவலரைக் கைது செய்ய வேண்டும். அதுவரை போராட்டம் நீடிக்கும் என்று வழக்கறிஞர் சங்கத் தலைவர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக, நீதிமன்ற பணிகள் மற்றும் காவல்துறை பணிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சனையில் முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு தீர்வு காண வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.