டாஸ்மாக் கடைகள் மூடல் எதிரொலி-டீக்கடை, பெட்டிக்கடைகளில் மது விற்பனை 'ஜோர்'
நெல்லை : உள்ளாட்சி தேர்தல் களை கட்டியுள்ளதாலும், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு விட்டதாலும், நெல்லை மாவட்டம் சிவகிரி, சேர்ந்தமரம் பகுதிகளில் டீக்கடை மற்றும் பெட்டிக் கடைகளில் மதுபாட்டில்கள் விற்பனை ஜோராக நடக்கிறது. ஆனால் இதை போலீசார் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருக்கி்றனர்.
உள்ளாட்சி தேர்தலை ஓட்டி நெல்லை மாவட்டத்தில் நாளை மற்றும் 19ம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களை கவருவதற்கு பணம் மற்றும் மதுபானங்களை கொடுப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.
இதனால் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை 2 மடங்கு முதல் 3 மடங்கு வரை உயர்ந்துள்ளது. இன்று முதல் 17ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளிலும் 19ம் தேதி தேர்தல் நடைபெறக்கூடிய பகுதிகளில் வரும் 17ம் தேதி முதல் வாக்குபதிவு முடியும் வரையும் டாஸ்மாக் கடைகளை அடைப்பிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இதற்கிடையே தேர்தல் ஆணையம் டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக பெட்டி பெட்டியாக விற்பனை செய்யப்படுவதை கண்காணிக்க வேண்டும் என்று காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால் அந்த உத்தரவை காற்றில் பறக்கவிடுவது போல் சிவகிரி, சேர்ந்தமரம் பகுதிகளில் பெட்டிகடைகள் மற்றும் டீக்கடைகளில் மதுபானங்கள் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. தனியார் டாஸ்மாக் கடைகள் போல் செயல்படும் இக்கடைகளில் பாட்டில் ஒன்றுக்கு 20 வரை கூடுதல் விலையில் விற்கப்படுகிறது. இதை போலீசார் கண்டுகொள்ளாததால் தேர்தல் நேரத்தில் சட்டம் ஓழுங்கு பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.