உயர் வகுப்பு ரயில் கட்டணம் உயர்கிறது!
அண்மையில் சரக்குக் கட்டணத்தை ரயில்வே துறை 6 சதவீதம் உயர்த்தியது. இந்நிலையில் நிதிப்பிரச்னை காரணமாக பயணிகள் கட்டணத்தை உயர்த்துவது குறித்தும் பரிசீலித்து வருகிறது.
கடந்த 8 ஆண்டுகளாகக் கட்டணங்களை ரயில்வே துறை உயர்த்தவில்லை. இந்நிலையில் திட்டக் கமிஷனின் ஆலோசனைப்படி தற்போது கட்டணங்களை உயர்த்தத் தீர்மானித்துள்ளது. ஏழை மக்களால் கட்டண உயர்வைத் தாங்க இயலாது. எனவே அவர்களை பாதிக்காத வகையிலும், கட்டணங்களைச் சீரமைக்கும் விதமாகவும் இந்த உயர்வு இருக்கும்.
வரும் ரயில்வே பட்ஜெட்டுக்கு முன்பாகவே கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு இருக்கிறது. கட்டணங்களை உயர்த்துவதற்கு பதில், ரயில்வே துறைக்குத் தேவைப்படும் நிதியை மத்திய நிதி தொகுப்பில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதி தேவை.
ஆனால் பயணக் கட்டணத்தை உயர்த்த அவ்வாறு அனுமதி பெறத் தேவையில்லை. எனவே முதல்கட்டமாக உயர்வகுப்புப் பயணிகளுக்கான கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிதித்துறை ஆணையர் பூம்பா பப்பர் தெரிவித்தார்.