200 வார்டுகளுடன் விரிவடைந்த சென்னை மாநகராட்சி தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு
சென்னை: 200 வார்டுகளுடன் கூடியதாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள சென்னை மாநகராட்சிக்கு நடைபெறும் முதல் தேர்தலில் மக்கள் படு விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
சென்னை மாநகராட்சி சமீ்பத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி பல்வேறு நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு 200 வார்டுகளுடன் கூடியதாக அது விரிவடைந்துள்ளது.
இந்த விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சிக்கு இன்று முதல் முறையாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.
இதில் மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் சைதை துரைசாமி, திமுக சார்பில் தற்போதைய மேயர் மா.சுப்பிரமணியம், பாமக சார்பில் ஏ.கே.மூர்த்தி உள்பட 32 பேர் போட்டியிடுகின்றனர்.
சென்னை மாநகராட்சித் தேர்தலுக்காக 4876 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தவாக்கு் சாவடிகள் அனைத்திலும் வீடியோ பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மக்கள் ஆர்வத்துடன் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி சைதாப்பேட்டையில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
சென்னையில் கடும் வெயில் கொளுத்தி வருவதால் காலையிலேயே வாக்களித்து விட வேண்டும் என்ற வேகத்துடன் வாக்காளர்கள் இருப்பதாக தெரிகிறது. அதேசமயம், கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது ஏற்பட்ட மிகப் பயங்கர வன்முறையை மக்கள் இன்னும் மறந்து விடவில்லை. எனவே முன்னெச்சரிக்கையாகவும் மக்கள் காலையிலேயே வாக்களிக்கு வந்துள்ளதாக கருதப்படுகிறது.
சென்னை மாநகராட்சித் தேர்தலில் மேயரையும் இந்த முறை மக்கள் நேரடியாக ஓட்டுப் போட்டுத் தேர்வு செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.