3 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்ள தென் ஆப்பிரிக்கா செல்கிறார் பிரதமர்
டெல்லி: தென் ஆப்பிரிக்காவில் நடக்க உள்ள இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா நாடுகளின் 5வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இந்திய பிரதமர் மன்மோகன் சிங், இன்று தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு செல்கிறார்.
தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரட்டோரியா நகரில், இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய 3 நாடுகளின் பங்கேற்கும் 5வது உச்சி மாநாடு நடக்க உள்ளது. இதில் 3 நாடுகளின் பொருளாதாரம் குறித்த கருத்து பரிமாற்றம் மற்றும் உலக பொருளாதாரம் குறித்து ஆலோசிக்க பட உள்ளதாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் மன்மோகன்சிங் இன்று 3 நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டுச் செல்கிறார். அவருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, வர்த்தக துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோர் செல்ல உள்ளனர். மாநாட்டில் பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்க ஜனாதிபதிகளுடன், இந்திய பிரதமர் மன்மோகன்சிங் பேச்சுவார்த்தை நடத்துவார்.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மாநாட்டில் சர்வதேச அளவில் தீவிரவாதத்தில் இருந்து பாதுகாப்பு, கடல் பாதுகாப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்படலாம். இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா நாடுகளின் பொருளாதார நிலை குறித்தும், அடுத்த மாதம் பிரான்ஸ் நாட்டில் நடக்க உள்ள ஜி-20 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும்.
கடந்த 2003ம் ஆண்டு பிரேசில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சர்கள் சந்தித்து 3 நாடுகளிடையேயான கூட்டமைப்பு உருவானது. கடந்த 2006ம் ஆண்டு முதல் 3 நாடுகள் கூடும் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்தியா, தென் ஆப்பிரிக்காவில் 1 முறையும், பிரேசில் நாட்டில் 2 முறையும் மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.