ஹோஸ்னி முபாரக் மகன்கள் ஸ்விஸ் வங்கியில் 340 மில்லியன் டாலர் பதுக்கியுள்ளதாக தகவல்
கெய்ரோ: முன்னாள் எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் மகன்கள் சுவிட்சர்லாந்து வங்கிகளில் 340 மில்லியன் டாலர் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர் என்று அவர்களது சொத்துக்கள் குறித்து விசாரித்து வரும் குழுவைச் சேர்ந்த ஒரு தெரிவித்துள்ளார்.
எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் செய்த கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராடி, கடந்த பிப்ரவரி மாதம் அவரை ஆட்சியில் இருந்து நீக்கினர். அந்த போராட்டத்தில் 850க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். எகிப்தில் தற்போது ராணுவ ஆட்சி நடக்கும் நிலையில் முபாரக் அவரது மகன்கள் கமால், ஆலா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 30 ஆண்டுகள் எகிப்தை ஆட்சி செய்த முபாரக் மற்றும் அவரது மகன் கமால், ஆலா மீது ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இந்த விசாரணையின் போது எகிப்து லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரி அசீம் எல்-ஹோகரி கூறியதாவது, சுவிட்சர்லாந்தில் முபாராக் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 450 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துகளை அந்நாடு முடக்கி வைத்துள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் முபாரக்கின் மகன்கள் 340 மில்லியன் டாலர் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். அதில் 300 மில்லியன் டாலர் ஆலாவுக்கு சொந்தமானது. இது குறித்த விசாரணையும் நடந்து வருகிறது.
மேலும் முபராக் குடும்பத்தினருக்கு சொந்தமான பணம் ஹாங்காங், ஐக்கிய அரபு எமிட்ரெட்ஸ் போன்ற நாடுகளில் உள்ள வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. முபாராக் குறித்து பல முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன. அவை அனைத்தையும் தற்போது வெளியிட இயலாது. ஆனால் தகுந்த நேரத்தில் வெளியிடப்படும் என்றார்.