உடுமலைப்பேட்டை அருகே வாக்குச்சாவடியில் படமெடுத்த 6 அடி நீள பாம்பு: தேர்தல் அலுவலர்கள் ஓட்டம்
திருப்பூர்: உடுமலைப்பேட்டை அருகே உள்ள ஒரு வாக்குச்சாவடியில் 6 அடி நீள பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடியதால் தேர்தல் அலுவலர்கள் ஓட்டம் பிடித்தனர்.
தமிழகத்தில் 2வது கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையை அடுத்த பெரியபாப்பனூத்து ஊராட்சியைச் சேர்ந்தவர்களுக்கு விளாமரத்துப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இன்று வாக்குப்பதிவு நடத்தத் தேவையான வாக்குபதிவு இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள் நேற்று அந்த வாக்குச்சாவடிக்கு கொண்டு வரப்பட்டன. அவற்றை பள்ளியில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்கு எடுத்துச் சென்றனர். அப்போது பள்ளி வளாகத்தில் 6 அடி நீள பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடியது.
பொருட்களை எடுத்து வந்தவர்கள் பாம்பைப் பார்த்தவுடன் கையில் இருந்தவற்றை அங்கேயே போட்டுவிட்டு ஓடிவிட்டனர். சிறிது நேரத்தில் அந்த பாம்பு அங்கிருந்து சென்றுவிட்டது. பாம்பு சென்றதை உறுதி செய்த பின் பொருட்களை பள்ளியின் உள்ளே கொண்டு சென்று வைத்தனர்.