ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகளை தேடிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்து: 3 பேர் பலி
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப் பாதுகாப்பு படையினரின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் 2 விமானிகள், ஒரு டெக்னீஷியன் உள்பட 3 பேர் உயிர் இழந்தனர்.
எல்லை பாதுகாப்பு படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரான த்ருவ் கடந்த 1 ஆண்டு காலமாக மாவோயிஸ்டுகளைத் தேடும் பணிக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனை பவன் ஹான்ஸ் சர்வீஸ் பராமரித்து இயக்கி வந்தது.
இந்நிலையில் அந்த ஹெலிகாப்டர் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து சாய்பாசாவுக்கு இன்று காலை 8. 40 மணிக்கு புறப்பட்டது. புறப்பட்ட 20 நிமிடத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் ராஞ்சி-குந்தி எல்லையில் உள்ள காட்டுப்பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானது.
இதில் அந்த விமானத்தில் பயணித்த விமானிகள் தாமஸ், எஸ். பி. சிங் மற்றும் டெக்னீஷியன் மனோஜ் சாய்ன் ஆகியோர் பலியாகினர்.
தரையில் இருந்து 4,000 அடி உயரத்தில் பறந்த ஹெலிகாப்டரை மாவோயிஸ்டுகள் தாக்கியிருக்க முடியாது என்று ஜார்க்கண்ட் போலீசாரின் செய்தித் தொடர்பாளர் மாலிக் தெரிவித்தார்.