கடலாடி அருகே அதிமுக நிர்வாகியை கத்தியால் குத்திய திமுக நிர்வாகி கைது
ராமநாதபுரம்: கடலாடி அருகே வாக்குச்சாவடியில் வைத்து அதிமுக நிர்வாகியை திமுக நிர்வாகி கத்தியால் குத்தியுள்ளார். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2வது கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே சிறுகுடி உள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி ஒன்றில் அதிமுக நிர்வாகி வேலு என்பவர் முதியவர் ஒருவரை ஓட்டு போட அழைத்து வந்துள்ளார்.
இதற்கு திமுக நிர்வாகி ரத்னவேல் பாண்டியன் என்பவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்பு அது மோதலாக வெடித்துள்ளது.
இந்த நிலையில் அதிமுக நிர்வாகி வேலுவை ரத்தினவேல் பாண்டியன் தொடையில் கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த வேலு கடலாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேலு கொடுத்த புகாரின்பேரில் திமுக நிர்வாகி ரத்னவேல் பாண்டியனை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.