நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு- கோபி கோர்ட்டில் நாளை ஆஜராகிறார் பர்வதம்மா
கடந்த 2000ம் ஆண்டு கன்னட நடிகர் ராஜ்குமார் தனது மனைவி பர்வதம்மாள், மருமகன் கோவிந்தராஜ், உதவியாளர் நாகப்பா மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து தமிழகத்திற்கு வந்தார். ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்துள்ள தனது சொந்த கிராமமான தொட்டகாஜனூரில் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அப்போது தான் சந்தன கடத்தல் வீரப்பன் அவரை கடத்திச் சென்றான்.
108 நாட்கள் காட்டில் வைத்திருந்தபிறகு அவரை வீரப்பன் விடுதலை செய்தான். இது குறித்த வழக்கு கோபி விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் 94 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட ராஜ்குமார் கடந்த 2006-ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி மரணம் அடைந்தார். அவரைக் கடத்திய வீரப்பனை கடந்த 2004ம் ஆண்டு அதிரடிப்படையினர் சுட்டுக்கொன்றனர்.
இந்நிலையில் அந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. இதையடுத்து நாளை நேரில் ஆஜராகுமாறு ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா, ஈரோடு மாவட்ட கலெக்டர்களாக இருந்த மகேசன் காசிராஜன், பாலச்சந்திரன் ஆகியோருக்கு கோபி விரைவு நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் சம்மன் அனுப்பியுள்ளார்.
இதில் பர்வதம்மா ராஜ்குமார் சம்மனைப் பெற்று நாளை ஆஜராகிறார். அதேசமயம், பாலச்சந்திரனும், காசிராஜனும் தேர்தல் பணியாக முறையே ஈரோடு மற்றும் சென்னையில் உள்ளனர். எனவே அவர்கள் வருவார்களா என்பது தெரியவில்லை.
வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தது தொடர்பாக இந்த இரு ஐஏஎஸ் அதிகாரிகளும் கலெக்டர்களாக இருந்தபோது கைது செய்ய உத்தரவு பிறப்பித்திருந்தனர். எனவே இருவரும் அரசுத் தரப்பு சாட்சிகளாக வாக்குமூலம் அளிக்க கோபி கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.