பெரம்பலூரில் அதிமுகவினர் வீடுகள் மீது தாக்குதல்- விடுதலை சிறுத்தைகளா?
பெரம்பலூர்: பெரம்பலூரில் அதிமுக வேட்பாளர் உட்பட கட்சி நிர்வாகிகள் 30 பேரின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன.
பெரம்பலூர் மாவட்டம் வேம்பூர் ஒன்றியத்தில் நேற்று உள்ளாட்சி தேர்தலின் 2ம் கட்ட வாக்குபதிவு நடந்தது. தேர்தல் வாக்குசாவடிகளில் வாக்குபதிவு நடப்பதை பார்வையிட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் காரில் வந்தார்.
திருமாந்துரை அருகே காரில் இருந்து திருமாவளவன் இறங்க முயன்றார். ஆனால் அவரை காரில் இருந்து இறங்கவிடாமல், சிலர் கார் மீது தொடர்ந்து கற்களை வீசியதாக தெரிகிறது. அதில் திருமாவளவனின் கார் கண்ணாடி உடைந்தது. இதை குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலையில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுகவை சேர்ந்த வேட்பாளர் செல்வமணி உட்பட 30 கட்சி நிர்வாகிகள் வீடுகள் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த வீடுகளில் இருந்த மிக்சி, டிவி உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன.
இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் செல்வமணி புகார் அளித்துள்ளார். அவரது புகாரில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.