அத்வானியின் ரதயாத்திரைக்கு தீவிரவாத அச்சுறுத்தல்? உளவுத்துறை எச்சரிக்கை
டெல்லி: அத்வானியின் ரத யாத்திரையின்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத் துறை எச்சரித்துள்ளது.
பாஜக மூத்த தலைவர் அத்வானி ஊழல் மற்றும் கருப்புப் பணத்திற்கு எதிராக ஜன் சேத்னா யாத்திரை என்னும் ரத யாத்திரை மேற்கொண்டுள்ளார். கடந்த 11ம் தேதி பீகாரில் உள்ள சிதாப்தியாரா என்ற இடத்தில் இருந்து ரத யாத்திரையைத் துவங்கினார். அதை பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் துவக்கி வைத்தார். பீகாரில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் சென்ற அவர் நேற்று அருணாச்சல பிரதேசத்தை அடைந்தார். தற்போது மேற்கு வங்க மாநிலத்தை அடைந்துள்ளார். வரும் 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் யாத்திரை மேற்கொள்கிறார்.
இந்த யாத்திரை மொத்தம் 38 நாட்கள் நடக்கிறது. கிட்டத்தட்ட 12,000 கி.மீ. தூரம் அத்வானி பயணம் செய்யவுள்ளார். தினந்தோறும் சுமார் 300 கி.மீ. தூரம் பயணம் செய்யும் அத்வானி, 23 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் யாத்திரை மேற்கொள்கிறார்.
இந்நிலையில் அத்வானியின் ரத யாத்திரையின்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத் துறை எச்சரித்துள்ளது. அத்வானிக்கு முறையான பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
வழியில் அத்வானியை சந்திக்கும் மக்களை முறையாக சோதனை செய்யாமல் அவரை சந்திக்க அனுமதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.