நிதி நெருக்கடியை போக்க ரயில் கட்டணத்தை உயர்த்த ரயில்வே துறை யோசனை
மத்திய அரசு நிறுவனங்களில் அதிக ஊழியர்களை கொண்டது துறை இந்தியன் ரயில்வே. ரயில்வே துறையில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு நிறுவனங்களில் 6வது சம்பளக் கமிஷன் பரிந்துறை செயல்படுத்தப்பட்டது.
ரயில்வே துறையில் அதிக பணியாளர்கள் உள்ள நிலையி்ல், 6வது சம்பள கமிஷன் பரிந்துறை அமல்படுத்தப்பட்டதால், 50 சதவீத வருமானம், பணியாளர்களின் சம்பவத்திற்கே ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் ரயில்வே துறையில் திட்டமிடப்பட்ட பல்வேறு பணிகள் தடைப்பட்டுள்ளது.
இதை நிவர்த்தி செய்ய 21 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்பட்டது. இந்த தொகையை கடனாக வழங்குமாறு மத்திய அரசிடம் ரயில்வே துறை கேட்டது. ஆனால் மத்திய நிதியமைச்சகம் இதற்கு மறுத்துவிட்டது. இதையடுத்து இந்த நஷ்டத்தை நிவர்த்தி செய்ய, ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் சிலர் கூறியதாவது,ரயில்வே துறையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க, ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ள ரயில் பயணக் கட்டணத்தை உடனடியாக உயர்த்துமாறு, திட்ட கமிஷன், நிதி இலாகா, ரயில்வே தொழிற்சங்கங்கள் என பலதரப்பினரிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது.
ஆனால் ரயில்வே கட்டண உயர்வு மூலம் சாதாரண மக்கள் பாதிக்கப்பட கூடாது என்பது ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதியின் விருப்பம். இதனால் கட்டண உயர்வை முதலில் ஏ.சி.வகுப்பு பெட்டிகளில் அமல்படுத்தலாம் என தெரிகிறது. இதன்மூலம் ரயில்வே துறைக்கு ஆண்டு வருமானத்தில் 4,000 கோடி ரூபாய் அதிகரிக்கும்.
ஆனால் இந்த தொகை மூலம் ரயில்வே துறையின் நஷ்டத்தை நிவர்த்தி செய்ய முடியாது. எனவே விரைவில் அனைத்து வகுப்புகளிலும் 20 முதல் 25 சதவீத கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என தெரிகிறது, என்றனர்.