டார்ஜிலிங்கில் பாலம் உடைந்து விழுந்து 31 பேர் பலி, 60 பேர் காயம்
டார்ஜிலிங்: மேற்கு வங்க மாநிலத்தில் ஆற்றின் மேல் கட்டப்பட்ட மரப்பாலம் உடைந்து விழுந்ததில் 31 பேர் பலியாகியுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் மாவட்டம், பிஜன்பரியில் உள்ள ரங்கித் கோகலா என்ற இடத்தில் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா கூட்டம் நடந்தது. அந்த இடத்திற்கு செல்ல வேண்டுமானால் ஆற்றின் மேல் உள்ள மரப்பாலத்தை கடக்க வேண்டும். அந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த 60க்கும் மேற்பட்டோர் அந்த மரப்பாலத்தில் சென்றுள்ளனர். இந்த நிலையில் பாரம் தாங்காமல் திடீர் என்று உடைந்து விழுந்தது.
அப்போது பாலத்தில் சென்றவர்கள் ஆற்றில் விழுந்தனர். இதில் 31 பேர் பலியாகினர், 60 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் சிலிகுரியில் உள்ள வடக்கு வங்காள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு படையினர், போலீசார் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். டார்ஜிலிங் மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று 40 பேர் கொண்ட ராணுவ குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜியும், ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி மற்றும் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சுதிப் பந்தோபத்யாய் ஆகியோர் இன்று டார்ஜிலிங் செல்கின்றனர்.
கடந்த மாதம் 18ம் தேதி அப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இப்பாலம் சேதமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சத்தீஸ்கர் ரயில் விபத்தில் 16 பேர் பலி
சத்தீஸ்கர் மாநிலத்தில் ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்றபோது ரயில் மோதி 16 பேர் உயிர் இழந்தனர், 15 பேர் காயம் அடைந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரில் உள்ள தர்பஹார் சிர்கிட்டி ரயில்வே கிராசிங்கை ஒரு கூட்டம் கடக்க முயன்றது. அப்போது இரண்டு ரயில்கள் அடுத்தடுத்த தண்டவாளங்களில் வந்து கொண்டிருந்தன.
இதைப் பார்த்து, ஒரு தண்டவாளத்தில் வந்த ரயிலில் மோதி விடாமல் தப்பிக்க மற்றொரு தண்டவாளத்திற்கு மக்கள் தாவினர். அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த இன்னொரு ரயில் மோதியதில் 16 பேர் பலியாகினர், 15 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நேற்றிரவு 7 மணிக்கு நடந்தது.
இதனால் மும்பை-ஹவ்ரா பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.