உத்தப்புரம் கிராமத்தில் தலித்கள்-பிற ஜாதியினர் சமரச ஒப்பந்தம்- சிபிஎம் வரவேற்பு
சென்னை: மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் தலித் சமுதாயத்தினருக்கும், பிற சமூகத்தினருக்கும் இடையே சமரச உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதை தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்தி வரவேற்றுள்ளது.
இதுகுறித்து மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மதுரை மாவட்டம் உத்தபுரம் கிராமத்தில் தலித் மக்களின் நீண்ட காலக் கோரிக்கைகள் குறித்து சுமூகமான உடன்பாடு ஏற்பட்டுள்ளது. காவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தலித் மக்களுக்கும் இதர சமூகத்தினருக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் வாழ்த்தி வரவேற்கிறது.
இந்த உடன்பாட்டின்படி தலித் மக்களுக்கு 22 ஆண்டுகளாக மறுக்கப்பட்ட உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இரு சமூகத்தினரும் ஒற்றுமையுடன் வாழவும், அமைதியை நிலைநாட்ட ஒத்துழைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தை அமல்படுத்திட தமிழக அரசும், காவல்துறையும் காலதாமதமின்றி உரிய முயற்சிகளை மேற்கொள்ளுமாறும், அதன் மூலமே தற்போது உருவாகியுள்ள இயல்பான சூழலை பாதுகாக்கவும், பலப்படுத்தவும் முடியும் என்பதையும் வலியுறுத்துகிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் தீண்டாமைச் சுவரைக் கட்டி தலித் மக்களை உத்தப்புரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு ஜாதியினர் ஒதுக்கி வைத்தது நாட்டையே அதிர வைத்தது. இதுதொடர்பாக பெரும் மோதல்களும், அடிதடிகள், வன்முறைகளும் நடந்தன. இந்த நிலையில் தற்போது ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதன் மூலம் அந்தக் கிராமத்தில் தீண்டாமைக் கொடுமை படிப்படியாக முழுமையாக அகலும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.