அமைச்சர் கருப்பசாமி திடீர் மறைவு எதிரொலி- மீண்டும் ஒரு இடைத் தேர்தலை சந்திக்கும் தமிழகம்
தமிழக சட்டசபைக்கு கடந்த மே மாதம் சட்டசபை தேர்தல் நடந்தது. அதில் அதிமுக அமோக வெற்றியைப் பெற்று தனித்து ஆட்சியைப் பிடித்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அமைச்சராகப் பதவியேற்ற திருச்சி மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ. மரியம் பிச்சை சாலை விபத்தில் அகால மரணமடைந்தார். இதையடுத்து திருச்சி மேற்கு தொகுதிக்கு கடந்த 13ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. அதில் அதிமுக மீண்டும் அமோக வெற்றி பெற்றது.
இந்நிலையில் ரத்த புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த தமிழக அமைச்சர் சி. கருப்பசாமி நேற்று மரணம் அடைந்தார்.
கருப்பசாமி நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இதனால் சங்கரன்கோவில் தொகுதி விரைவில் இடைத் தேர்தலை சந்திக்க உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மீண்டும் தேர்தல் பரபரப்பு எழுந்துள்ளது. ஒரு தொகுதியில் உறுப்பினர் ஒருவர் மரணமடைந்தாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ ஆறு மாதத்திற்குள் அங்கு இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே இன்னும் 6 மாதத்திற்குள் சங்கரன்கோவில் இடைத் தேர்தலை சந்திக்கவுள்ளது.
கருப்பசாமியின் உடல் இன்று காலை சங்கரன் கோவில் அருகே உள்ள அவரது சொந்த ஊரான புளியம்பட்டிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு இன்று மாலை இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அவருக்குச் சொந்தமான தோட்டத்தில் கருப்பசாமியின் உடல் அரசு மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்பட்டது.