காணாமல் போன புதுவை அமைச்சரைக் கண்டுபிடித்தால் பரிசு தருவதாக அதிமுக அறிவிப்பு
ஏற்கனவே காணவில்லை என்ற தலைப்பில் கல்யாணசுந்தரத்தைக் காணவில்லை என்று கூறி புதுவை இளைஞர் காங்கிரஸார் போஸ்டரும், துண்டுப் பிரசுரமும் வெளியிட்டு சலசலப்பை ஏற்படுத்தினர். இந்த நிலையில் புதுச்சேரி அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் பரிசு தருவதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அன்பழகன் கூறுகையில்,
புதுச்சேரி கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் மீது மத்திய அரசு தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையில் அ.தி.மு.க. சார்பில் மனு அனுப்பப்பட்டது. இதில் 15 நாட்களாகியும் மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் தேடப்பட்டுவரும் புதுச்சேரி கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு யாராக இருந்தாலும் ரூ 50 ஆயிரம் பரிசு வழங்கப்படும்.
மாறாக இந்த பிரச்சினையை பயன்படுத்தி முதல்வர் ரங்கசாமியை சமரசம் செய்து ஆதாயம் தேட காங்கிரஸ் முயற்சிக்கிறது. ஒரு அமைச்சரை காப்பாற்ற ஒட்டு மொத்த அரசும் செயல்படுகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அனுமதி பெற்று அ.தி.மு.க. சார்பில் இதற்காக போராட்டம் நடத்துவோம் என்றார் அன்பழகன்.
'குட்டியூண்டு' மாநிலமான புதுச்சேரியில், கல்யாணசுந்தரம் எங்கு போய் தலைமறைவாக இருப்பார் என்பது மிகப் பெரிய வியப்பாகவும், புரியாத புதிராகவும் இருக்கிறது.