பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சிறை பிடிக்கப்பட்ட இந்திய வீரர்கள், ராணுவ ஹெலிகாப்டர் விடுவிப்பு
டெல்லி: மோசமான வானிலை காரணமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் புகுந்த இந்திய ராணுவ ஹெலிகாப்டரை பிடித்த பாகிஸ்தான் விமானப்படையினர் பின்னர் அதை விடுவித்தனர். இதையடுத்து இந்திய ராணுவ ஹெலிகாப்டரும், அதில் இருந்த நான்கு ராணுவத்தினரும் பத்திரமாக கார்கில் திரும்பினர்.
ராணுவத்தின் விமானப் பிரிவைச் சேர்ந்த சீட்டா வகை ஹெலிகாப்டர் ஒன்று நேற்று பிற்பகலில் லே பகுதியிலிருந்து பிம்பத் நோக்கி பறந்து கொண்டிருந்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் கார்கில் பகுதிக்குல் அது நுழைந்தது.
இதையடுத்து விரைந்த பாகிஸ்தான் விமானப்படையினர் இந்திய ஹெலிகாப்டரை மடக்கி கொண்டு சென்றனர். பின்னர் தரையிறக்கினர்.
இந்திய ஹெலிகாப்டரில் இருந்த மூன்று ராணுவ அதிகாரிகள் (விமானி, துணை விமானி, ஜூனியர் கமிஷன் அதிகரி) சிறை பிடிக்கப்பட்டனர். அவர்களிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ஹெலிகாப்டரில் இருந்த இந்தியர்கள் மூவரும் பேரும் பத்திரமாக இருப்பதாகவும், அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும் பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அத்தார் அப்பாஸ் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இந்தியர்களையும், ஹெலிகாப்டரையும் விடுவிக்குமாறு இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர், பாகிஸ்தானை கேட்டுக் கொண்டார். இதையடுத்து பாகிஸ்தான் அதிகாரிகள் இந்திய அதிகாரிகளையும், ராணுவ ஹெலிகாப்டர்களையும் விடுவித்தனர். இதையடுத்து ஹெலிகாப்டர் பத்திரமாக நமது கார்கில் பகுதிக்குத் திரும்பியுள்ளது.
இந்திய ஹெலிகாப்டர் வேண்டும் என்றே தங்களது பகுதிக்குள் ஊடுறுவவில்லை என்று பாகிஸ்தான் ராணுவமும் தெளிவுபடுத்தியுள்ளது.