ஆள் மாறாட்ட வழக்கில் சிக்கி தலைமறைவான புதுவை அமைச்சர் மீண்டும் திரும்பினார்!
புதுச்சேரி: பத்தாம் வகுப்பு பரீட்சைக்கு தனக்குப் பதில் வேறு ஒருவரை தேர்வு எழுத அனுப்பி வழக்கில் சிக்கி தலைமறைவாக இருந்து வந்த புதுச்சேரி கல்வி மற்றும் போக்குவரத்து அமைச்சர் கல்யாணசுந்தரம் இன்று திடீரென திரும்பினார். தனது அலுவலகத்திற்குச் சென்று வழக்கம் போல வேலையைப் பார்த்தார்.
இவரை ஒப்படைக்கக் கோரி தமிழக போலீஸார் 2 முறை சம்மன் அனுப்பியும், அவரைக் காண முடியவில்லை என்று கூறி சம்மனை சபாநாயகர் சபாபதி திருப்பி அனுப்பினார் என்பது நினைவிருக்கலாம்.
கல்யாணசுந்தரம் திண்டிவனத்தில் தனித்தேர்வு மூலம் 10-ம் வகுப்பு பரீட்சை எழுத விண்ணப்பித்திருந்தார். அறிவியல் மற்றும் சமூக அறிவியலுக்காக விண்ணப்பித்த இவர் ஒரு தேர்வை மட்டும் வேறு ஆளை விட்டு எழுதினார். இன்னொரு தேர்வை இவரும் எழுதவில்லை, வேறு யாரையும் அனுப்பவில்லை.
இதையடுத்து விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் அமைச்சர் கல்யாணசுந்தரம் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்துவதற்காக குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் புதுவை வந்தனர். ஆனால் அவர்களால் கல்யாணசுந்தரத்தை சந்திக்க முடியவில்லை. எனவே இதற்கான சம்மனை போலீசார் சபாநாயகரிடம் கொடுத்துவிட்டு சென்றனர்.
2 முறை சம்மன் தந்தும் சபாநாயகர் சபாபதி அதை போலீஸாருக்குத் திருப்பி அனுப்பி விட்டார்.
இந்த நிலையில், கல்யாணசுந்தரம் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை 28-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே குற்றப்பிரிவு போலீசார் திண்டிவனம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தனியாக ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், கல்யாணசுந்தரத்தை போலீஸ் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர். இதன் விசாரணை அடுத்த மாதம் 2-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இந்த விவகாரத்தால் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார் கல்யாணசுந்தரம். தனது அலுவலகத்துக்கும் வரவில்லை. எங்கும் காணப்படவில்லை. இதனால் போஸ்டர் ஒட்டி அமைச்சரைக் காணவில்லை என்று எதிர்க்கட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த நிலையில் இன்று திடீரென கல்யாண சுந்தரம் தனது அலுவலகத்திற்கு திடீரென வந்தார். வழக்கம் போல வேலையைப் பார்த்தார். அவரை அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் சந்தித்தனர்.
இவர் தொடர்ந்து இதேபோல பணிக்கு வருவாரா அல்லது மீண்டும் தலைமறைவாவாரா என்பது தெரியவில்லை.