10 புதிய மேயர்கள் பதவியேற்றனர்: சைதை துரைசாமி பதவியேற்பை நேரில் வந்து வாழ்த்தினார் ஜெ.
தமிழகத்தி்ல் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடந்தது. சட்டசபை தேர்தலைப் போன்று உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக அதிக இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. 10 மாநகராட்சி மேயர் பதவிகளையும் அதிமுக கைபற்றியது. 125 நகராட்சிகளில் 89 இடங்களிலும், 529 பேரூராட்சிகளில் 287 இடங்களிலும் அதிமுக வெற்றி பெற்றது.
இந்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 மேயர்கள், நகராட்சித் தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோர் இன்று பதவி ஏற்றனர்.
சென்னையில் சைதை துரைசாமி, மதுரையில் ராஜன் செல்லப்பா, கோவையில் செ.ம. வேலுச்சாமி, திருச்சியில் ஜெயா, திருநெல்வேலியில் விஜிலா சத்தியானந்த், திருப்பூரில் விசாலாட்சி, தூத்துக்குடியில் சசிகலா புஷ்பா, சேலத்தில் சவுண்டப்பன், வேலூரில் கார்த்தியாயினி, ஈரோட்டில் மல்லிகா பரமசிவம் ஆகியோர் இன்று பதவியேற்றனர்.
சென்னை விழாவில் ஜெயலலிதா
சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங்கில் பிரமாண்ட பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் முதல்வர் ஜெயலலிதா, சபாநாயகர் ஜெயக்குமார், அமைச்சர்கள், அதிமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர்கலந்து கொண்டனர். மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், மேயர் சைதை துரைசாமிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சென்னை மாநகராட்சியில் அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் மேயராகியிருப்பது இதுவே முதல் முறையாகும்.எனவே அதிமுகவினர் மிகப் பெரிய உற்சாகத்துடன் காணப்பட்டனர். குறிப்பாக முதல்வர் ஜெயலலிதா முகம் நிறைய மகிழ்ச்சியுடன் விழாவில் பங்கேற்றார்.
மேயர் உடையில் துரைசாமி
மேயராகப் பதவியேற்றகுக் கொண்ட சைதை துரைசாமி, மேயர்கள் அணியும் பாரம்பரிய அங்கி, 18 பவுன் தங்கச் சங்கிலி, கையில் செங்கோல் ஆகியவை கொடுக்கப்பட்டன. அதையடுத்து உறுப்பினர்கள் பதவியேற்பு தொடங்கியது.
இதேபோல மற்ற 9 மாநகராட்சிகளிலும், புதிய மேயர்களுக்கு மாநகராட்சி கமிஷனர்களும், நகராட்சி தலைவர்களுக்கு நகராட்சி கமிஷனர்களும், பேரூராட்சி தலைவர்களுக்கு பஞ்சாயத்து நிர்வாக அதிகாரிகளும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தனர்.
சேலத்தில் சவுண்டப்பன்
சேலம் மாநகராட்சி மேயராக சவுண்டப்பன் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கமிஷனர் லக்ஷ்மிப்ரியா பதவி பிரமாணம் செய்து வைத்தார். அந்த விழாவில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, எம்பி செம்மலை ஆகியோர் கலந்துகொண்டனர். திருப்பூர் மேயராக விசாலாட்சி பதவியேற்றுக் கொண்டார்.
தூத்துக்குடியில் சசிகலா புஷ்பா
தூத்துக்குடி மாநகராட்சி மேயராக சசிகலா புஷ்பா பதவியேற்றுக் கொண்டார். அந்த விழாவில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டி ஆகியோர் கலந்துகொண்டனர். தூத்துக்குடி மாநகராட்சிக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் மேயர் என்ற பெருமையை சசிகலா பெற்றுள்ளார். அவருககு கமிஷனர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
மதுரையில் ராஜன் செல்லப்பா
நெல்லை மாநகராட்சி மேயராக விஜிலா இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கமிஷனர் அஜய் யாதவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மதுரை மாநகராட்சி மேயராக ராஜன்செல்லப்பா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கமிஷனர் நடராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
திருச்சியில் ஜெயா
திருச்சி மேயராக பதவியேற்றுக் கொண்ட ஜெயாவுக்கு கமிஷனர் வீரராகவனும், கோவை மேயர் செ. ம. வேலுசாமிக்கு கமிஷனர் முத்துசாமியும், ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவத்திற்கு கமிஷனர் பாலச்சந்திரனும், வேலூர் மேயர் கார்திகாயினிக்கு கமிஷனர் அஜ்மல்கானும் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.
இவர்கள் தவிர மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள், கிராம பஞ்சாயத்து தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோரும் இன்று பதவி ஏற்றனர்.
முன்னதாக,உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பிற கட்சிகளைச் சேர்ந்த நகராட்சி தலைவர்கள், ஊராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் என 380க்கும் மேற்பட்டோர் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
பஞ்சாயத்து உறுப்பினர்கள் பதவியேற்பு
நெல்லை மாவட்ட பஞ்சாயத்தில் கலெக்டர் செல்வராஜ் முன்னிலையில் மாவட்ட பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர்கள் பதவியேற்றனர். மாவட்ட பஞ்சாயத்து செயலர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்தில் தூத்துக்குடி கலெக்டர் அஷிஸ்குமார் முன்னிலையில் மாவட்ட பஞ் வார்டு உறுப்பினர்கள் பதவியேற்றனர்.
முதலில் மூத்த உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். பிறகு பிற உறுப்பினர்களுககு பதவி பிரமணம் செய்து வைத்தனர்.
நெல்லை மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், விக்கிரமாசிங்கபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய 7 நகராட்சிகளில் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் அந்தந்த நகராட்சி கமிஷனர் முன்னிலையில் பதவியேற்றனர்.