ஐரோப்பிய நாடுகளின் கடன் நெருக்கடி விவகாரம்: பிரிட்டன் - பிரான்ஸ் மோதல்!
ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளின் தலைவர்கள் மற்றும் யூரோ நாணயத்தை புழக்கத்தில் வைத்திருக்கும் 17 நாடுகளின் தலைவர்கள் கூட்டம் பெல்ஜியம் தலைநகர் ப்ரஸ்ஸல்ஸில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
முதல் கூட்டத்தில், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல், பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், இத்தாலி பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
இதில், எந்த ஒரு முக்கியமான முடிவும் எடுக்கப்படவில்லை.
அயர்லாந்து, போர்ச்சுகல், கிரீசை தொடர்ந்து, தற்போது இத்தாலி, ஸ்பெயின் நாடுகள் கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளதால், அந்த நெருக்கடி மேலும் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவும் என்ற அச்சத்தை நீக்கும் வகையில், பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டன.
ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. எனவே யூரோ மண்டலக் கடன் நெருக்கடிக்கு முழுமையான தெளிவான தீர்வு காண்பதற்கு, நாளை அக்டோபர் 26-ம் தேதி மீண்டும் ஒரு கூட்டம் நடக்கிறது. அதில், யூரோ கரன்சி பயன்படுத்தும் 17 நாடுகள் மட்டும் கலந்து கொண்டால் போதும்' என, சார்கோசி ஆலோசனை தெரிவித்தார்.
ஆனால், அதை எதிர்த்த பிரிட்டன் பிரதமர் கேமரூன், "யூரோ கடன் நெருக்கடி பிற நாடுகளையும் பாதிக்கும் அபாயம் இருப்பதால், ஐரோப்பிய யூனியனின் 27 நாடுகளும் கலந்து கொள்ள வேண்டும்" என வலியுறுத்தினார். உடனே கேமரூனைப் பார்த்து, "இதனால் ஒரு பயனும் இல்லை. உங்கள் யோசனை எங்களுக்கு வேண்டாம். வாயை மூடிக் கொண்டிருங்கள்," என்றா் சார்கோசி கடும் கோபத்துடன்.
இந்த கருத்து வேறுபாட்டால் சலசலப்பு ஏற்பட்டது.
ஆனாலும் கடைசியில் பிரிட்டிஷ் பிரதமர் யோசனை ஏற்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நாளை நடக்க உள்ள கூட்டத்தில், 27 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
கடன் நெருக்கடி - பிரச்னை தீர முன்வைக்கப்பட்ட யோசனைகள்...
இப்போதைய சிக்கல்கள் தீர, ஐரோப்பிய நிலைத்த நிதி அமைப்பிற்கு (இ.எப்.எஸ்.எப்.,) கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.
ஆனால் அந்த அமைப்பு ஒரு வங்கியாகச் செயல்பட வேண்டும் என பிரான்ஸ் கூறிய யோசனை நிராகரிக்கப்பட்டு விட்டதாக, ஜெர்மனி அதிபர் தெரிவித்தார்.
ஐரோப்பிய வங்கிகள், கிரீசுக்கு அளித்த கடன் பத்திரங்களில், 60 சதவீதத்தை கழித்து விட வேண்டும்.
இதன் மூலம் ஏற்படும் நஷ்டத்தைச் சமாளிக்கவும், வங்கிகள் திவாலாவதைத் தடுக்கும் விதத்திலும், அவற்றின் முதலீடு அதிகரிக்கப்படும். இதற்காக, 100 பில்லியன் யூரோ தொகை வழங்கப்படும்.
இந்த 100 பில்லியன் யூரோ தொகை, ஐரோப்பிய நாடுகளின் அரசுகள், வர்த்தக முதலீட்டாளர்கள், இ.எப்.எஸ்.எப்., ஆகியவற்றின் மூலம் திரட்டப்படும்.
தேவைப்படும் பட்சத்தில், ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தத்தில் சிற்சில திருத்தங்கள் மட்டும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஸ்பெயின், கிரீஸின் கடன் நெருக்கடி தீர ஒதுக்கப்பட்டுள்ள 440 பில்லியன் யூரோ போதாது என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய யூனியலிருந்து விலக பிரிட்டிஷ் எம்பிக்கள் நெருக்கடி
இதற்கிடையே, ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகிக் கொள்ள வேண்டும் என கன்சர்வேடிவ் கட்சி எம்பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் இதனை பிரதமர் கேமரூன் ஏற்கவில்லை. இந்த நெருக்கடியான சூழலில் யூனியனிலிருந்து விலகி, மேலும் ஒரு நெருக்கடியை உருவாக்க விரும்பவில்லை, என்று அவர் கூறியுள்ளார்.