13வது முறையாக வட்டியை உயர்த்தியது ரிசர்வ் வங்கி... இனி கடன் ரொம்ப ரொம்ப காஸ்ட்லி!
இதன் மூலம் நுகர்வு, வாகன, வீட்டுக் கடன்கள் ஏக காஸ்ட்லியாக மாறியுள்ளன.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பொருளியலறிஞர்கள் 10-க்கும் மேற்பட்ட வழிகளை, 'கட்டுப் பாட்டுக் கருவிகளாக' முன்வைத்துள்ளனர்.
ஆனால் இந்திய பொருளியல் கொள்கை வகுப்பாளர்களுக்கு தெரிந்துள்ள ஒரே வழி வட்டியை உயர்த்துவது மட்டும்தான் போலிருக்கிறது.
கடந்த ஆண்டிலிருந்து தொடர்ந்து வட்டி வீதங்களை மட்டும் 13 முறை உயர்த்திவிட்டது ரிசர்வ் வங்கி.
இப்போது உணவுப் பணவீக்க விகிதம் இரட்டை இலக்கத்தைத் தொட்டுவிட்டதாலும், முதன்மைப் பணவீக்கம் 9.72 சதவீதத்துக்கு உயர்ந்திருப்பதாலும் ரெபோ ரேட் எனப்படும் வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கிக உயர்த்தியுள்ளது.
25 சதவீதம் இந்த வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரெபோ ரேட் 8.5 சதவீதமாக உயர்ந்துவிட்டது.
இதனால் வங்கிகள் வழங்கும் அனைத்து வகை கடன்களுக்கும் வட்டிகள் உயர்கின்றன. குறிப்பாக வாகனக் கடன், வீட்டுக்கடன் போன்றவற்றின் வட்டிகள் மேலும் அரை சதவீதம் வரை உயரவிருக்கிறது.
எதிர்மறை விளைவு
இந்த வட்டி வீத உயர்வுகள் பணவீக்க உயர்வை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தவில்லை என்பதோடு, உற்பத்தித் துறையின் வளர்ச்சியை பெருமளவு பாதிக்க ஆரம்பித்துள்ளதாக பொருளியல் அறிஞர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மூன்றாம் காலாண்டில் மட்டும் 2.5 சதவீதம் வரை வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக சிஐஐ அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த வீழ்ச்சிக்கு காரணம், வட்டி வீத உயர்வுகளால், உற்பத்திக்கான மூலப்பொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதுதான்.