பண்டிகை வந்தாலே ஏழை, நடுத்தர மக்களுக்கு கவலை வந்துவிடுகிறது: விஜயகாந்த்
சென்னை: பண்டிகை வந்தால் மகிழ்ச்சி அடைவதற்கு பதிலாக ஏழை, நடுத்தர மக்கள் கவலை அடைகின்றனர். காரணம் புத்தாடையில் இருந்து பட்டாசு வரை அனைத்தின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது தான் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஆண்டிற்கு ஒரு நாள் வருவது தீபாவளி திருநாள். அன்று எண்ணெய் குளியல் செய்துவிட்டு, புத்தாடை உடுத்தி, இனிப்புப் பண்டங்களை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்கி, பட்டாசு கொளுத்தி பெற்றோர்களுடனும், பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியோடு தீபாவளி திருநாளை கொண்டாடுவது வழக்கம்.
தீமையை அகற்றி, நன்மையை விளைவிப்பதன் அறிகுறியாகவே விளக்கேற்றி வைக்கும் ஒளித் திருநாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. சாதாரண மக்களில் இருந்து, பெரும் பணக்காரர்கள் வரை தீபாவளி கொண்டாடவே ஆசைப்படுகின்றனர். விழாக்களும், பண்டிகைகளும் வருகிறது என்றாலே ஏழை, நடுத்தர மக்கள் மகிழ்ச்சி அடைவதற்குப் பதிலாக யாரிடம் கடன் வாங்குவதென்ற கவலையே அடைகின்றனர். உணவுப் பண்டங்களின் விலை மட்டுமல்ல, ஆடைகள் மற்றும் பட்டாசுகள் என்று எதை வாங்கச் சென்றாலும் அவையெல்லாம் அதிகமான விலையிலேயே விற்கப்படுகின்றன. தங்களுடைய வருமானம் அன்றாட குடும்பச் செலவிற்கே சரியாகி விடுவதால் இது போன்ற பண்டிகைகளை கொண்டாட சிரமப்படும் நிலையிலேயே பெரும்பாலான மக்கள் உள்ளனர்.
இந்திய அரசின் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியே இன்றியமையாத பொருட்களின் விலை உயர்ந்து விட்டது என்றும், அது கவலை தருகின்றது என்றும் கூறியுள்ளார். யார் விலைவாசி குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அவரே கைவிரித்து விட்டால் நாம் என்ன செய்வது?
எனினும் இருப்பதைக் கொண்டு தீபாவளி திருநாளை மகிழ்ச்சியாக மக்கள் கொண்டாட வேண்டுமென்றும், எதிர்காலத்தில் அவர்களுக்கு நல்வாழ்வு அமைய வேண்டுமென்றும் தேமுதிக சார்பில் எனது இதயமார்ந்த தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
ராம.கோபாலன் வாழ்த்து:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம. கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கை,
தீபாவளித் திருநாளில் இருள் அகன்று ஒளி பரவுவது போன்று தர்மம் மலர்ந்து அதர்மம் அழியவும், ஆட்டம் போடுகிற தேசவிரோத சக்திகள் நரகாசுரனைப் போல அழிக்கப்படவும், எல்லோரும் நலமும், வளமும் பெற எல்லாம் வல்ல எம்பெருமான் அருள்பாலிக்கப் பிரார்த்திக்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.