இந்தியா-ஆப்கானிஸ்தான் கைகோர்த்தால் ஐஎஸ்ஐ களமிறங்கும்: முஷாரப்
வாஷிங்டனைச் சேர்ந்த Carnegie Endowment for International Peace என்ற சர்வதேச விவகாரங்களுக்கான ஆய்வு மையத்தில் பேசிய அவர், சுதந்திரம் பெற்றதில் இருந்தே ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கு எதிராகவே உள்ளது. அந் நாட்டுக்கு ரஷ்யா மற்றும் இந்தியாவுடனான உறவே இதற்குக் காரணம்.
இப்போது ஆப்கானிஸ்தானை பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா திருப்பி விட முயற்சித்து வருகிறது. இதை நான் இந்தியாவுக்கு எதிரானவன் என்ற நிலையில் இருந்து சொல்லவில்லை. முழுக்க முழுக்க ரகசிய தகவல்களை வைத்தே சொல்கிறேன். இந்தியாவின் இந்தச் செயல் துரதிஷ்டவசமானது, அதை அனுமதிக்க முடியாது.
உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமானால், இன்று ஆப்கானிஸ்தானின் தூதர்கள், ராணுவத்தினர், உளவுப் பிரிவினர் அனைவருமே பயிற்சிக்காக இந்தியாவுக்குத் தான் செல்கின்றனர். திரும்பி வரும்போது பாகிஸ்தானுக்கு எதிரான மன நிலையோடு வருகின்றனர். இதைத் தடுக்க ஐஎஸ்ஐ தலையிடுவதை தடுக்க முடியாது.
இந்திய உளவுப் பிரிவான ரா, ரஷ்ய உளவுப் பிரிவான கேஜிபி, ஆப்கானிஸ்தான் உளவுப் பிரிவான காத் ஆகியவை 1950ம் ஆண்டுகளில் இருந்தே இணைந்தே செயல்பட்டு வருகின்றன.
2014ம் ஆண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியவுடன் அந் நாடு மீண்டும் மாபெரும் உள்நாட்டுக் குழப்பத்தில், உள்நாட்டுப் போரில் வீழும். இதனால் அதிகமாக பாதிக்கப்படப் போவது பாகிஸ்தான் தான் என்றார்.