ராசாவின் நண்பர் பாட்சா கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரம் இல்லை- சிபிஐ: மர்மம் நீடிக்கிறது!
டெல்லி: முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவின் நண்பரான சாதிக் பாட்சா கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் அவர் தற்கொலை தான் செய்து கொண்டார் என்பது உறுதியாகியுள்ளது.
கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த சாதிக் பாட்சா (38) கடந்த மார்ச் 16ம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
ராசாவின் மிக நெருங்கிய நண்பரும் தொழில்முறை கூட்டாளியுமான அவரிடம் 2ஜி விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தி வந்த நிலையில் அவர் மர்மமாக இறந்தார்.
அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ஆனால், அது கொலையாக இருக்கலாம் என்றரீதியில் புகார்கள் எழுந்ததால், அது குறித்து சிபிஐ விசாரணைக்கு அப்போதைய மாநில திமுக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த தடயவியல் நிபுணர்கள், டாக்டர்கள் குழுவினர் பாட்சாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கைகளை ஆய்வு செய்தனர். மேலும் மாநில அரசு மருத்துவமனையில் அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்தபோது எடுக்கப்பட்ட சில உடல் பகுதிகளையும் சோதனையிட்டனர்.
அதில், பாட்சா கொல்லப்பட்டார் என்பதற்கு எந்தவித ஆதாரமும் கிடைக்கவில்லை.
மேலும் தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் உள்ளது அவரது கையெழுத்துதான் என்பதும் உறுதியாகியுள்ளது. நிர்பந்தித்தின் காரணமாக அவர் அந்தக் கடிதத்தை எழுதவில்லை என்பதும் தடயவியல் நிபுணர்களின் சோதனையில் உறுதியாகியுள்ளது.
இதனால் சாதிக் பாட்சா கொல்லப்படவில்லை என்றே சிபிஐ கருதுகிறது. இது தொடர்பாக சிபிஐ விரைவில் தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளது.
சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டார் என்ற கோணத்திலேயே இந்த வழக்கை சிபிஐ இனி நடத்தவுள்ளது. அதே நேரத்தில் தற்கொலைக்கான காரணங்கள் குறித்து மேலும் விரிவான விசாரணையை சிபிஐ ஆரம்பிக்கலாம் என்று தெரிகிறது.