லோடு ஆட்டோ மோதி 3 மாணவர்கள் பலி
நாசரேத்: தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் லோடு ஆட்டோ மோதி 3 மாணவர்கள் பலியானார்கள்.
தூத்தக்குடி மாவட்டம் நாசரேத் ரோஜாப்பூ நகரை சேர்ந்தவர்கள் சுந்தர்ராஜன் மகன் காலேப். ராஜரத்தினம் மகன் குட்டி என்ற அருள்தாஸ். கென்னடி மகன் டேனியல். மாணவர்களான இவர்கள் 3 பேரும் நண்பர்கள். காலேப் நாகர்கோவிலில் உள்ள ஒரு பாலிடெக்னிக்கிலும், அருள்தாஸ் நாசரேத்திலும் உள்ள பாலிடெக்னிக்கிலும், டேனியல் நாசரேத்திலிலுள்ள பள்ளியில் பன்னிரென்டாம் வகுப்பும் படிந்து வந்தனர்.
இவர்கள் 3 பேரும் மாலை நாசரேத்தில் இருந்து ஆழ்வார்திருநகரிக்கு மோட்டார் சைக்களில் சென்றனர். காலேப் மோட்டார்சைக்கிளை ஓட்ட மற்ற 2 பேரும் பின்னால் உட்கார்ந்து சென்றனர்.
நாசரேத்-ஆழ்வார்திருநகரி இடையே உள்ள அரசாங்கநகர் பகுதியில் வந்தபோது அவர்களது மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த லோடு ஆட்டோ மோதியது. இதில் மாணவர்கள் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.
அவர்களில் காலேப் சம்பவ இடத்திலேயே பலியானார். அருள்தாசும், டேனியலும் உயிருக்கு போராடியபடி கிடந்தனர். அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக பாளை ஐகிரவுண்ட் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வரும் வழியிலேயே அருள்தாஸ் இறந்தார்.
பிளஸ்டூ மாணவரான டேனியல் பாளை ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.