திருப்பதியில் விற்பனை வரி செலுத்தாததால் 800 கிலோ தலைமுடி பறிமுதல்
திருப்பதி கோவில் தரிசனத்துக்கு தினமும் லட்சக்கணக்கான மக்கள் வருகின்றனர். அவர்கள் கடவுளுக்கு காணிக்கையாக தங்கள் முடியை கொடுக்கின்றனர். தினமும் கிலோ கணக்கில் சேகரிக்கப்படும் இந்த முடி விற்பனை செய்யப்படுகிறது.
திருமலை தேவஸ்தானத்துக்கு சொந்தமான முடி சேகரிப்பு கிடங்கு, அலிபிரி டோல்கேட் அருகே உள்ளது. அந்த கிடங்கில் இருந்து ரூ. 38 லட்சம் மதிப்புள்ள 800 கிலோ எடை கொண்ட தலைமுடியை அனந்தபுரம் மாவட்டம் உரவகொண்டா நகரைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் வாங்கினார்.
ஆனால் அவர் தலைமுடிக்கு செலுத்த வேண்டிய 4 சதவீத விற்பனை வரியை செலுத்தவில்லை. வரியை செலுத்தாமலேயே தலைமுடியை 3 லாரிகளில் ஏற்றிக் கொண்டு கிளம்பினார். திருப்பதி-ரேணிகுண்டா சாலையில் சென்று கொண்டிருக்கையில் அந்த லாரிகளை விற்பனை வரித்துறை அதிகாரிகள் நிறுத்தினர். அப்போது நடத்திய சோதனையில் விற்பனை வரி செலுத்தாதது தெரிய வந்தது. இதையடுத்து தலைமுடியுடன் 3 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.