கேரளா அமைச்சர் டி.எம்.ஜேக்கப் கல்லீரல் பாதிப்பால் மரணம்
கொச்சி: கேரள அமைச்சர் டி.எம்.ஜேக்கப் நேற்றிரவு கல்லீரல் பாதிப்பால் காலமானார். அவரது உடல் மக்கள் பார்வைக்காக எர்ணாகுளம் டவுன் ஹாலில் வைக்கப்பட்டுள்ளது.
கேரள மாநில உணவுத் துறை அமைச்சராக இருந்தவர் டி.எம்.ஜேக்கப்(61). கேரளாவில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து கேரள காங்கிரஸ் ஜேக்கப் என்ற கட்சியை வழிநடத்தி வந்தவர்.
இந்தாண்டு மே மாதம் அமைச்சராக பொறுப்பேற்ற ஜேக்கப், கடந்த 17ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக கொச்சி லேக் ஷோர் மருத்துவமனையி்ல் கிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் நேற்றிரவு அவருக்கு கல்லீரல் செயலிழந்தது இதையடுத்து அவர் இரவு 10.30 மணிக்கு உயிரிழந்தார். அவருக்கு மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
கடந்த 1977ம் ஆண்டு பிரவம் தொகுதியில் போட்டியிட்டு கேரள சட்டசபைக்குள் நுழைந்த அவர், 2001ம் ஆண்டு வரை நடந்த தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றவர். கேரள சட்டசபையில் மிக குறைந்த வயதில் (26 வயது) பதவி வகித்தவர் என்ற பெருமையை பெற்றவர். கேரள முன்னாள் முதல்வர்கள் கருணாகரன், ஏ.கே.அந்தோணி ஆகியோர் அமைச்சரவையில் 4 முறை அமைச்சராக இருந்துள்ளார்.
டி.எம்.ஜேக்கப் இறப்புக்கு மெளன அஞ்சலி செலுத்திய பின் இன்று கேரள சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது. ஜேக்கப்பின் உடல் எர்ணாகுளம் டவுன் ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஆயிரக்கணக்கானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஜேக்கப் மரணத்தை தொடர்ந்து நாளை கேரளாவில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 10 மணிக்கு காக்கூர் செயின்ட் மேரீஸ் ஜேக்கபைட் சர்ச்சில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பள்ளி பருவம் முதல் சிறந்த தலைவராக இருந்த ஜேக்கப் ஒரு நல்ல நண்பர் என கூறியுள்ளார்.