சூரசம்ஹாரம் பார்க்க மேடையில் ஏறிய அமைச்சர்கள், கலெக்டர் கீழே விழுந்தனர்
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் இன்று நடந்த சூரசம்ஹாரத்தைப் பார்க்க வந்த அமைச்சர்கள் சண்முகநாதன், செல்லப்பாண்டியன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மேடை சரிந்ததில் கீழே உருண்டு விழுந்தனர். அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை.
திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. லட்சோபம் லட்சம் பக்தர்கள் புடை சூழ முருகப் பெருமான் சூரனை சம்ஹாரம் செய்யும் இந்த நிகழ்ச்சியைக் காண குவிந்திருந்தனர்.
தமிழக அமைச்சர்கள் சண்முகநாதன், செல்லப்பாண்டியன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட விஐபிக்கள் அவர்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த விஐபி மேடையில் ஏறினர். அப்போது சிலர் முண்டியடித்துக் கொண்டு வேகமாக மேடையில் ஏறியதால் பாரம் தாங்க முடியாமல் அந்த மேடை சரிந்தது. இதையடுத்து நிலை தடுமாறிய அமைச்சர்களும், கலெக்டரும் உருண்டு விழுந்தனர்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களைப் பிடித்து நிறுத்தி தூக்கி விட்டனர். இதனால் விபரீதம் தவிர்க்கப்பட்டது.