அத்வானி ரத யாத்திரை பாதையில் குண்டு வைத்தது அல் உம்மா!-கைதான இருவர் சிறையில் அடைப்பு
மதுரை: பாஜக மூத்த தலைவர் அத்வானியின் ரத யாத்திரை சென்ற பாதையில், பாலத்துக்குக் கீழ் பைப் வெடிகுண்டு வைத்த வழக்கில் அல் உம்மா அமைப்புக்குத் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல வருடங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட இமாம் அலியின் கூட்டாளிகள் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அல் உம்மா அமைப்பின் முக்கியத் தலைவரான 'போலீஸ்' பக்ருதீன் என்பவர் உள்ளிட்ட சிலருக்கு வலை வீசப்பட்டுள்ளது.
பாஜக தலைவர் அத்வானி ரத யாத்திரை மேற்கொண்டுள்ளார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை மதுரைக்கு வந்திருந்தபோது அங்கிருந்து திருமங்கலம் வழியாக நெல்லை மாவட்டத்திற்குப் பயணித்தார். அவர் செல்வதற்கு முன்பு, திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி தரைப் பாலத்துக்குக் கீழ் ஒரு 8 அடி நீளமுள்ள பைப்வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அத்வானியின் யாத்திரைக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார், உளவுப் பிரிவு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில் தற்போது இருவரைக் கைது செய்துள்ளனர் போலீஸார். இருவரும் அல் உம்மா அமைப்பைச் சேர்ந்தவர்கள், இமாம் அலியின் ஆதரவாளர்கள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் நேற்று கூறுகையில், அத்வானி ரதயாத்திரைப் பாதையில் பைப் வெடிகுண்டு வைத்தது தொடர்பான வழக்கில் மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த அப்துல் ரகுமான் மற்றும் சிம்மக்கல்லைச் சேர்ந்த இஸ்மத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்ட இமாம் அலியின் ஆதரவாளர்கள் ஆவர்.
இவர்களில் ரகுமான் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இஸ்மத் ஆட்டோ ஓட்டுநர் ஆவார். இருவரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இவர்கள் மீது ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது. இவர்களிடமிருந்து வெடிகுண்டை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோவைப் பறி்முதல் செய்துள்ளோம்.
இதேபோல திருமங்கலத்தைச் சேர்ந்த உஸ்மான் அலி என்பவரும் சிக்கியுள்ளார். இவர் எலக்ட்ரீசியன் ஆவார். இவரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
வழக்கில் மேலும் சிலருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களையும் தேடி வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இருவரையும் திருமங்கலம் கோர்ட்டில் போலீஸார் இன்று ஆஜர்படுத்தினர். அவர்களை நவம்பர் 16ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
'போலீஸ்' பக்ருதீனுக்கு வலைவீச்சு
குண்டுவைப்புச் சம்பவத்தில் மொத்தம் 10 பேரும் மேல் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்குத் தலைவான் போல செயல்பட்டுள்ள நபர் பெயர் 'போலீஸ்' பக்ருதீன் (பக்ருதீனுக்கு எப்படி போலீஸ் பக்ருதீன் என்ற பெயர் வந்தது என்பது தெரியவில்லை.).
கோவை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தி்ற்குப் பின்னர் அல் உம்மா அமைப்பு தமிழகத்தில் தடை செய்யப்பட்டு விட்ட போதிலும், ரகசியமான முறையில் அது இயங்கி வருவது தற்போது அம்பலமாகியுள்ளது. கிட்டத்தட்ட 70 பேர் வரை இந்த இயக்கத்தில் ரகசியமாக செயல்படுவதாக தெரிய வந்துள்ளது.
அத்வானி ரத யாத்திரைப் பாதையில் குண்டுவெடிப்பை நிகழ்த்தி மீண்டும் தீவிரமாக செயல்பட அல் உம்மா திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த குழுவுக்கு 'போலீஸ்' பக்ருதீன் தீன் தலைவராக செயல்பட்டு வருவதும் தெரிய வந்தது.
ஆலம்பட்டி பாலத்தில் குண்டுவைத்தவர்கள் வந்த மஞ்சள் நிற பைக் மற்றும் ஆட்டோவை சிலர் பார்த்துள்ளனர். அதுகுறித்து அவர்கள் போலீஸாருக்குத் துப்பு கொடுத்திருந்தனர். அதை வைத்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில்தான் நெல்பேட்டையில் அந்த மஞ்சள் நிற பைக் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு டெய்லர் கடை முன்பு அது நின்றிருந்தது.
இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தியபோதுதான் அந்த பைக்கை அங்கு நிறுத்திச் சென்றது பக்ருதீன் என்பது தெரிய வந்தது. அதன் பின்னர்தான் பக்ருதீன் தலைமையிலான கும்பலே குண்டு வைத்தது தெரிய வந்தது.
இதையடுத்து தீவிரமாக விசாரணையை முடுக்கி விட்ட போலீஸார் அப்துல் ரகுமான் மற்றும் இஸ்மத்தைப் பிடித்தனர். பக்ருதீன் மற்றும் பிறர் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் கோவை அல்லது கேரளாவுக்கு தப்பியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் அங்கு போலீஸார் விரைந்துள்ளனர்.