அனைத்துப் பொருள்களின் விலையும் கிடுகிடு... உணவுப் பணவீக்கம் 12 சதவீதத்தைத் தாண்டியது!
இந்த வாரம் 12.21 சதவீதமாக உள்ளது உணவுப் பணவீக்கம்.
உணவு தானியங்கள், பால் பொருள்கள், பழங்கள் மற்றும் காய்கறி விலை கடும் உயர்வைச் சந்தித்துள்ளன.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு உருப்படியாக எந்த நடவடிக்கயையும் எடுப்பதாகத் தெரியவில்லை என்ற பொருளாதார நிபுணர்களின் குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளது, பணவீக்கத்தின் போக்கு.
மீண்டும் மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்துவதை மட்டுமே பணவீக்க கட்டுப்பாட்டு நடவடிக்கையாக ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் கருதி வருகின்றன. இதுவரை 13 முறை வட்டி விகிதத்தை உயர்த்திவிட்டது மத்திய அரசு. ஆனால் பணவீக்க விகிதம் குறைந்தபாடில்லை.
கடந்த வாரத்தில் 11.43 சதவீதம் என்றிருந்த உணவுப் பணவீக்கம், வட்டி வீத உயர்வுக்குப் பிறகு கட்டுக்குள் வரும் என நம்பினர். ஆனால் மேலும் உயர்வு கண்டுள்ளது உணவுப் பணவீக்கம்.
காய்கறிகள் விலை 29 சதவீதமும், பழங்கள், பருப்புகள், பால் பொருள்கள் விலை 11 சதவீதத்துக்கு மேலும் உயர்ந்துள்ளது. வெங்காயம் விலை 20 சதவீதம் குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன (ஆனால் கடந்த 3 வாரங்களாக விலை எக்கச்சக்கமாக கூடியுள்ளது!).
ரொம்ப கவலையா இருக்கு - பிரணாப்
இந்த உயர்வு பெரும் கவலையளிப்பதாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். அரசும் மத்திய ரிசர்வ் வங்கியும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.