தி.நகர் கடைகளில் சீலை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு- அரசுக்கு நோட்டீஸ்
சென்னை: சென்னை தியாகராய நகரில் விதி மீறிய கட்டடங்களுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறி விட்டது. இதுதொடர்பாக ரத்னா பேன்ஹவுஸ் நிறுவனம் விடுத்த கோரிக்கையை கோர்ட் நிராகரித்து விட்டது.
தியாகராயநகரில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு கடந்த திங்கட்கிழமை சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும அதிகாரிகளும், மாநகராட்சியும் இணைந்து சீல் வைத்தனர். இதனால் 500க்கும் மேற்பட்ட கடைகளில் பொருட்கள் முடங்கியுள்ளன. வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களும் வேலை இழந்துள்ளனர். இந்த நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில், வியாபாரம் செய்வதற்கு வசதியாக சீல் வைக்கப்பட்டதை அகற்றக்கோரி தி.நகர் ரத்னா பேன் ஹவுஸ் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர். மேலும் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இரண்டு வார காலத்திற்கு பின்னர் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்றும் கூறி நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.