டெல்லியில் பயங்கர தாக்குதல் நடத்த பாக். தீவிரவாதிகள் ஊடுருவல்: உளவுத்துறை எச்சரிக்கை
பாகிஸ்தான் தீவிரவாதிகள் டெல்லியில் பயங்கர தாக்குதல் நடத்தத திட்டமிட்டுள்ளனர் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது ஆகிய தீவிரவாத அமைப்பினைச் சேர்ந்தவர்கள் தான் இந்த தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக ஏற்கனவே 5,6 போர் டெல்லிக்குள் ஊடுருவிவிட்டதாகவும் அது தெரிவித்துள்ளது.
அவர்கள் மெட்ரோ ரயில் நிலையம், ரயில் நிலையம், சேனா பவன் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களைத் தாக்க சதித் திட்டம் தீட்டியுள்ளனர் என்று அது கூறியுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வந்த தொலைபேசி அழைப்புகளை இடைமறித்து கேட்டபோது தான் இந்த சதித் திட்டம் தெரிய வந்துள்ளது. இதையடுத்து டெல்லி முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் எந்நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தீவிர வாகனச் சோதனையும் நடத்தப்படுகிறது.
டெல்லி தவிர மும்பை, பெங்களூர், அகதாபாத் போன்ற நகரங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 2008ம் ஆண்டு கடல் வழியாக இந்தியாவுக்குள் வந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் நடத்திய பயங்கர தாக்குதலில் 266 பேர் பலியாகினர். இந்த நிலையில் அவர்கள் தற்போது புதிய தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது மக்களை பீதியடையச் செய்துள்ளது.