இந்தியாவிடம் மின்சாரம் வாங்க பேச்சு நடத்துகிறோம்: பாக். பிரதமர் கிலானி
பாகிஸ்தானில் தற்போது 18,000 மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் அதில் 13,250 மெகா வாட் மின்சாரம் மட்டுமே அங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ள 5,000 மெகா வாட் மின் பற்றாக்குறையை நீக்க பாகிஸ்தான் அரசு கடும் முயற்சிகள் எடுத்து வருகிறது.
பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாட்டை கண்டித்து கடந்த ஜூலை மாதம் நடந்த போராட்டத்தில் போலீசார்- பொதுமக்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 2 பேர் பலியாகினர். 30 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் நாட்டில் ஏற்பட்டுள்ள மின் தட்டுபாட்டை போக்க உயர் திறன் கமிட்டி (ஹை பவர் கமிட்டி) அமைக்கப்பட்டது.
இது குறித்து ஒரு பாகிஸ்தான் டிவி சேனலுக்கு அந்நாட்டு பிரதமர் கிலானி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள மின்தட்டுபாட்டை போக்க, குறுகிய கால திட்டங்கள் முதல் நீண்ட கால திட்டங்கள் வரை துவங்கப்பட்டுள்ளன. 4,000 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட டயாமிர் பாஷா அணை கட்ட பொது விருப்ப கவுன்சில்(சிசிஐ) அனுமதி அளித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் டர்பிலா அணையின் ஆயுட்காலம் மேலும் 35 ஆண்டுகள் அதிகரிக்கும்.
இந்த மின்சார பற்றாகுறையை போக்க இந்தியாவிடம் இருந்து 500 முதல் 1,000 மெகா வாட் மின்சாரம் வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
ஊழலை நீக்க திட்டம்:
பாகிஸ்தான் தேசிய நிறுவனங்களில் உள்ள ஊழல்களை போக்கும் வகையி்ல் புதிய மசோதா ஒன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. நான் அரசியலில் நுழைந்ததில் இருந்து பல ஊழல் குற்றசாட்டுகளை பார்த்திருக்கிறேன். முகமது கான் ஜுன்ஜோ, நவாஸ் ஷரீப், பெனாசீர் பூட்டோ ஆகியோரின் ஆட்சிகள் ஊழல் குற்றசாட்டுகளால் கவிழ்ந்தன. ஊழல் குற்றசாட்டுகளை எழுப்புவது எளிது. ஊழல் குறித்த ஆதாரங்கள் இருப்பவர்கள் நீதிமன்றத்துக்கு தான் செல்ல வேண்டும்.
பாகிஸ்தானில் உள்ள அனைத்து மாநிலங்களின் பொருளாதார நிலையை மாற்றும் வகையில் 2 வருட திட்டம் ஒன்றை விரைவில் அறிவிக்க உள்ளேன் என்றார்.