ஒரத்தநாட்டில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரியை அமைக்க ஜெ. உத்தரவு
சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு கிராமப்புற பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் தனிநபர் வருமானத்தினை உயர்த்துவதிலும் பெரும்பங்கு வகிக்கும் கால்நடை பராமரிப்புத் துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள கால்நடைகளுக்கு தரமான மருத்துவ வசதியை அளிக்க வேண்டுமெனில், சிறந்த கால்நடை மருத்துவர்களை உருவாக்குவது அவசியமான ஒன்றாகும். தற்போது தமிழ்நாட்டில் இயங்கி வரும் இரண்டு கால்நடை மருத்துவ கல்லூரிகளால் கால்நடை மருத்துவர்களின் தேவை நிறைவு செய்யப்படவில்லை.
எனவே, கால்நடை மருத்துவர்களை அதிகம் உருவாக்கும் வகையில் கால்நடைகள் அதிகமாக உள்ள பகுதியான தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் தஞ்சை டெல்டா பகுதியில் ஒரத்தநாட்டில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஒன்றினை அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இக்கல்லூரி ரூ.85 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 100.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படும். இதற்கென இந்த ஆண்டு 16கோடியே 34 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் இக்கல்லூரியில் 40 மாணவர்கள் கால்நடை மருத்துவம் பயில அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.