அண்ணா நூலகத்தை மாற்ற தடை- மருத்துவமனைக்கு வேறு இடமே இல்லையா என்று நீதிபதிகள் கேள்வி!
பேரறிஞர் அண்ணா நூற்றாண்டை ஒட்டி சென்னை கோட்டூர்புரத்தில் 200 கோடி ரூபாய் செலவில் கடந்த திமுக ஆட்சியில் பிரமாண்ட நூலகம் கட்டப்பட்டது. நவீன வசதிகள் கொண்ட இந்த நூலக கட்டடத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்போவதாகவும். கல்லூரி சாலையில் உள்ள டிபிஐ வளாகத்திற்கு நூலகம் இடமாற்றம் செய்யப்படும் என்றும் செவ்வாய்கிழமை முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இதற்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழறிஞர்களும், நூலக வாசகர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே நூலகத்தை இடமாற்றம் செய்ய தடை விதிக்கக்கோரி வழக்கறிஞர்கள் புகழேந்தி, பிரபாகரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நூலகத்தை இடமாற்றம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர்கள் குறிப்பிட்டுருந்தனர். அந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
இடைக்காலத்தடை
மனுவை விசாரித்த நீதிபதிகள், நவீன வசதி கொண்ட நூலகத்தை இடமாற்றம் செய்வது ஏன் என்று தமிழக அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர். குழந்தைகள் மருத்துவமனை கட்ட வேறு இடம் கிடைக்க வில்லையா? என்றும் அவர்கள் வழக்கறிஞரிடம் கேட்டனர். இதனையடுத்து நூலகத்தை இடமாற்றம் செய்ய இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், அரசின் முடிவுக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.
விளக்கம் கேட்டு நோட்டீஸ்
அந்த நோட்டீசிற்கு 6 வார காலத்திற்குள் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மறு உத்தரவு வரும் இந்த இடைக்கால தடை உத்தரவு செல்லும் என்றும் நீதிபதிகள் எம்.ஒய்.இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.