சம்பளம் தராத அதிகாரிகளை அறையி்ல் பூட்டிய ஊழியர்கள்- 3 நாட்களாக தவிப்பு
சென்னை: சென்னை, கிண்டியில் சம்பளம் கிடைக்காமல் தவித்த ஐடி நிறுவன ஊழியர்கள், அதன் அதிகாரிகள் மூவரை அறையில் அடைத்து வைத்துள்ளனர். 3 நாட்களாக அறையி்ல் அடைத்து வைக்கப்பட்டுள்ள தங்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை கிண்டியில் என்எக்ஸ்டி ஜீபோ டெக்னாலஜி என்ற தகவல் தொழிற்நுட்ப நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் வேலை செய்யும் 100க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கடந்த 3 மாதமாக சம்பளம் தரப்படவில்லை என்று தெரிகிறது.
இதுகுறித்து பல முறை மேலதிகாரிகளை கேட்ட பணியாளர்கள், 4 நாட்களுக்கு முன் சம்பளம் தர வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். ஆனால் சம்பளம் கிடைத்தபாடில்லை. இதனால் ஆத்திரமடைந்த பணியாளர்கள், நிறுவனத்தின் மேலதிகாரிகளான பம்மலை சேர்ந்த திருமாறன், ஹன்சுமான், முரளி ஆகியோரை நிறுவனத்தில் ஒரு அறையில் தள்ளி பூட்டினர்.
தங்களுக்கு சம்பளம் வரும் வரை அந்த அறையை திறக்க போவதில்லை என்று கூறியுள்ளனர். இந்த நிலையில் அறையி்ல் அடைக்கப்பட்டவர்களின் உறவினர்கள், நிறுவனத்துக்கு தொடர்பு கொண்ட போது, இந்த தகவலை அறிந்தனர்.
இதுகுறித்து அறையில் அடைக்கப்பட்டுள்ள திருமாறன், தனியார் டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த நிறுவனத்தில் பணியாற்றும் எனக்கு இன்னும் ஒரு மாத சம்பளம் பாக்கி உள்ளது. மும்பையில் உள்ள நிர்வாக மேலாளர் நாளை சம்பளம் கொடுத்துவிடுவதாக உறுதி அளித்துள்ளார்.
ஆனால் நிறுவன பணியாளர்கள் சம்பளம் கையில் வரும் வரை வெளியே விட முடியாது என்று கூறுகின்றனர். அறையில் அடைக்கப்பட்டுள்ள நாங்கள் பல் தேய்த்து சாப்பிட்டு 3 நாட்களாகிவிட்டது, என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தால் அந்த அலுவலகம் உள்ள இடத்தில் பரபரப்பு நிலவுகிறது. சிறை பிடிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் குடும்பத்தார் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். இருப்பினும் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.