கன்னியாகுமரியில் சுனாமி எச்சரிக்கை மையம் அமைப்பு பணிகள் 'விறுவிறு'
நாகர்கோவில்: கன்னியாகுமரி கடலில் சுனாமி சார்ந்த தகவல்களை முன் கூட்டியே அறிவிக்கும் வகையில் சுனாமி தகவல் மையம் அமைப்பதற்கான பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளன. 10 நாட்களில் நவீன கருவிகள் வந்து சேர இருக்கின்றன.
கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி சுனாமி பேரலை தமிழகத்தை தாக்கியது. இந்த நிலையில் மத்திய அரசின் கடல்சார் வாரியம் சார்பில் தமிழகத்தில் கடலூர், நாகப்பட்டினம், ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய கடல் பகுதியில் சுனாமி முன்னேச்சரிக்கை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
கன்னியாகுமரியில் ரூ.15 லட்சம் செலவில் சுனாமி முன்னேச்சரிக்கை மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக பணிகள் நடந்து வருகிறது. கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக வளாகத்தில் இந்த மையம் அமைக்கப்படுகிறது.
இதற்காக படகு துறையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் 10 மீட்டர் ஆழத்திற்கு காங்கிரீட் பிளாக்குகள் போடும் பணிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்தது. கிரேன் உதவியுடன் காங்கிரீட் பிளாக்குகள் கடலுக்குள் போடப்பட்டன. சுமார் 1 முதல் 2 டன் எடை கொண்ட 40 பிளாக்குகள் இவ்வாறு போடப்பட்டன.
கடலில் போடப்பட்ட பின்னர் அனைத்து பிளாக்குகளும் காங்கீரிட் போடப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. இதன் மீது கட்டிடம் எழுப்பப்பட்டுள்ளது. நேற்று கூரை தளம் காங்கீரிட் போடப்பட்டது. சுனாமி முன்னேச்சரிகையை அறிவிப்பதற்கான கருவி இங்கு பொருத்தப்பட உள்ளது. இவை அனைத்தும் கணிணி முலம் இணைக்கப்பட்டு டேராடூனில் உள்ள நீர்பரப்பியல் ஆராய்ச்சி மையத்திற்கு உடனுக்குடன கிடைக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும்.
கடல் அலையில் உயர்மட்டம், தாழ்ந்த மட்டம், சுனாமிக்கான அறிகுறிகள், கடல் அலையின் வேகம், நீரின் தன்மை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இங்கிருந்து சேகரிக்கப்படும். சுனாமி தகவல் மைய கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில் நிறுவப்படுவதற்கான நவீன கருவிகள் 10 நாட்களில் வந்து சேர உள்ளன. கருவிகள் பொருத்தப்பட்ட உடன் மையம் செயல்பட தொடங்கும்.