10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் மறியல்: பலர் கைது
நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், பெட்ரோல்-டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது, குறைந்தபட்ச ஊதியமாக ரூ.10,000 வழங்க சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்தில் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யூ., திமுக தொழிற்சங்கமான தொ.மு.ச., பி.எம்.எஸ்., ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.சி.சி.டி.யூ., ஏ.ஐ.யு.டி.யு.சி., டபிள்யூ.பி.டி.யு.சி. ஆகிய 9 தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டன.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். பெட்ரோல் விலை உயர்வை சித்தரிக்கும் வகையில் ஆட்டோ டிரைவர்கள் ஒரு ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து வந்தனர். பின்னர் அனைவரும் நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் ஏராளமானோர் மறியலில் ஈடுபட்டு கைதானார்கள்.