திமுக - அதிமுக ஆட்சிகளுக்கிடையே சிக்கித் தவிக்கும் மக்கள் நலப் பணியாளர்கள்
கடந்த 1990ம் ஆண்டு திமுக ஆட்சியால் மக்கள் நலப் பணியாளர்கள் பதவி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது 25,000 பேர் பணியமர்த்தப்பட்டனர். அப்போது இவர்களுக்கு மாதம் ரூ. 200 தொகுப்பூதியமாக நிர்ணயிக்கப்பட்டது. ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை இவர்கள் செய்வார்கள், ஊராட்சிகளின் பணிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்று அப்போது அரசு அறிவித்தது.
இந்த நிலையில் 1991ல் ஆட்சி மாறியது.அதிமுக ஆட்சிக்கு வந்தது. வந்ததும் முதல் வேளையாக மக்கள் நலப் பணியாளர்களை பணியிலிருந்து நீக்கியது. இதனால் அவர்கள் பல்வேறு வகையான போராட்டங்களை மேற்கொண்டனர். இந்த நிலையில் 1996ல் மீண்டும் திமுகஆட்சிக்கு வந்தது. இதையடுத்து மறுபடியும் மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி அளிக்கப்பட்டது. அவர்களது தொகுப்பூதியமும் ரூ. 500 ஆக உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில் மறுபடியும் 2001ல் திமுக ஆட்சி போய் அதிமுக ஆட்சிக்கு வந்தது. மறுபடியும், மக்கள் நலப் பணியாளர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். பின்னர் 2006ல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தபோது மாதம் ரூ.1000 தொகுப்பூதியத்துடன் மறுபடியும் பணியமர்த்தப்பட்டனர். தற்போது இவர்கள் மாதம் ரூ. 4000 ஊதியமாக பெற்று வந்தனர். இந்தநிலையில்தான் 12,500 பேரையும் வீட்டுக்கு அனுப்பியுள்ளது அதிமுக அரசு.
இப்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பணியிலருந்து நீக்கப்பட்டு வருவதால் தங்களது நிலைமையும், குடும்ப சூழ்நிலையும் பெரும் அவலத்துக்குள்ளாகியுள்ளதாக மக்கள் நலப் பணியாளர்கள் குமுறுகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியின்போது நியமிக்கப்பட்ட டாஸ்மாக் பணியாளர்களை திமுக ஆட்சிக்கு வந்தபோது நீக்கவில்லை. மாறாக அவர்களுக்கு ஊதிய உயர்வு, போனஸ், வார விடுமுறை உள்ளிட்ட சலுகைகளைக் கொடுத்தது. ஆனால் அதிமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மக்கள் நலப் பணியாளர்கள் மீது கைவைப்பது தங்களையும், தங்களது குடும்பங்களையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.