இழப்பீடு வழங்காததால் வேலூர் அருகே அரசு பஸ் ஐப்தி
வேலூர்: தனியார் மருத்துவமனை ஊழியர் அரசுப் பேருந்து மோதி இறந்த வழக்கில் அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால் வேலூர் அருகே அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த சேம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயகுமார் (31). அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.
அவர் கடந்த 4.7.08 அன்று வடபழனியில் உள்ள நூறு அடிசாலையில் அரசுப் பேருந்து மோதி இறந்தார். இதையடுத்து ஜெயகுமார் குடும்பத்தினர் சார்பில் குடியாத்தம் சப் - கோர்ட்டில் இழப்பீடு வழங்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திருநீலபிரசாத் ரூ.18 லட்சத்து 9 ஆயிர்தது 912ஐ, 6 சதவீத வட்டியுடன் ஜெயகுமாரின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று 17.4.09 அன்று அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ரூ.16 லட்சத்து 50 ஆயிரத்தை அடுத்த 12 வாரத்துக்குள் குடியாத்தம் சப்-கோர்ட்டில் டெபாசிட் செய்ய வேண்டும் என்று 10.12.09 அன்று உத்தரவிட்டது. ஆனால் இது வரை அரசு போக்குவரத்துக் கழகம் அந்த தொகையை செலுத்தவில்லை.
இதனால் மீண்டும் குடியாத்தம் சப்-கோர்ட்டில் ஜெயகுமார் குடும்பத்தினர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சார்பு நீதிபதி மோகனகுமாரி கடந்த 23.9.11 அன்று பேரணாம்பட்டு மற்றும் குடியாத்தத்தில் இருந்து சென்னை செல்லும் 3 அரசுப் பேருந்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
அதன் பேரில் பேரணாம்பட்டில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசுப் பேருந்தை குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் வைத்து அமீனா ஜப்தி செய்தார். அதில் இருந்த பயணிகள் வேறு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அரசு போக்குவரத்துக் கழக பேரணாம்பட்டு மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, குடியாத்தம் சப்-கோர்ட்டில் ஆஜராகி, இழப்பீட்டு தொகையை வரும் 10 ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் கட்டுவதாக உறுதி அளித்தார். இதனையடுத்து ஜப்தி நடவிக்கை கைவிடப்பட்டது.
அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளின் மெத்தனத்தால் பயணிகள் பெரும் அவஸ்தைக்கு ஆளாகினர்.